லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்து வருகிறது. இதன் காரணமாக களத்தில் இந்திய அணி வீரர்கள் தீயாக இருக்கிறார்கள்.இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடிய ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால் இந்திய வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடி இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்றினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் மட்டுமே எடுக்க இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. பென் டக்கட் 43 ரன்களில் ஆட்டம் இழக்க, ஜாக் கிராலி 64 ரன்களில் வெளியேறினார்.

இதை அடுத்து ஆலி போப் 22 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த கட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரிய ஸ்கோரை குவிக்கும் முனைப்பில் இருந்தார். ஆனால் அவருடைய கவனத்தைச் சிதறடிக்கும் விதமாக இந்திய வீரர்கள் வம்பி இழுத்தனர்.
பிரசித் கிருஷ்ணா தன்னுடைய ஓவரை முடித்துவிட்டு ஜோ ரூட்டை ஸ்லேஜிங் செய்தார். எப்போதும் பொறுமையாக இருக்கும் ஜோ ரூட், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலடி கொடுத்தார். இதனை கவனித்த நடுவர் குமார தர்மசேனா, பிரசித் கிருஷ்ணாவை கண்டித்தார். இதனால் கடுப்பான ராகுல், எப்படி எங்களுடைய பவுலரை நீங்கள் எச்சரிக்கலாம் என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த நடுவர் தர்மசேனா, நீங்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது வேறு ஏதாவது பவுலர் இப்படி வந்து உங்களிடம் பேசினால் நீங்கள் அதை ஏற்பீர்களா என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலடி தந்த ராகுல், அதற்காக எங்களை அமைதியாக களத்தில் இருக்க சொல்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நடுவர், இல்லை கிரிக்கெட் விளையாடுவதற்கு என்ன ஒரு முறை இருக்கிறது என்று கூறினார்.
இது ராகுலை எரிச்சல் அடைய செய்தது. அதற்கு மீண்டும் பதிலடி கொடுத்த ராகுல், நீங்கள் பேட்டிங் செய்து பந்து வீசிவிட்டு களத்தை விட்டு செல்லுங்கள் என்று கூறுகிறீர்கள். எங்களால் அப்படி இருக்க முடியாது என்று பதிலடி தந்தார். உடனே நடுவர் தர்மசேனா இப்படி எல்லாம் பேசக்கூடாது. இன்றைய நாள் முடிவடைந்த உடன் நாம் இதைப் பற்றி பேசுவோம் என்று கூறி வீரர்களை அனுப்பி வைத்தார். இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட போது அமைதி காத்த நடுவர்கள், இந்திய வீரர்கள் பதிலடி தந்தவுடன் பஞ்சாயத்து செய்ய வந்தது குறிப்பிடத்தக்கது.