லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியாவின் முன்னணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் களமிறங்காமல் இருந்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அவரது சிறுவயது பயிற்சியாளர் கபில் தேவ் பாண்டே, குல்தீப் யாதவுக்கு இப்போதாவது இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குல்தீப் யாதவ் குறித்து பேசிய கபில் தேவ் பாண்டே. விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டால் குல்தீப் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இந்திய அணி ஆல்-ரவுண்டர்களை நம்பாமல் முழு பலம் கொண்ட பந்துவீச்சு தாக்குதலை களமிறக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. குல்தீப் யாதவை சேர்த்தால் தான் அது நடக்கும் என பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.

மார்ச் 2017 இல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து வெறும் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் குல்தீப் யாதவ். ஆனாலும், அணியில் தேர்வு செய்யப்படும்போது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். குல்தீப்பின் டெஸ்ட் வாழ்க்கை அவ்வப்போது மட்டுமே இருந்துள்ளது.
ஜூலை 23 அன்று தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளம் என்ற பார்வை உள்ளது. குறிப்பாக இந்த தொடரில் போட்டியின் பின்பகுதியில். முக்கிய தருணங்களில் இங்கிலாந்து அணியை ஆட்டமிழக்கச் செய்ய இந்திய அணி திணறி வரும் நிலையில், குல்தீப் யாதவை சேர்த்தால் நடு ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இது பற்றி பேசிய கபில் தேவ் பாண்டே "நான் சமீபத்தில் குல்தீப்பிடம் பேசினேன், அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தயாராக இருக்கவும், சிறப்பாக செயல்படவும் சொன்னேன். நாம் அனைவரும் நம்பிக்கை மட்டுமே வைக்க முடியும் - இறுதி முடிவு பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் கைகளில் உள்ளது. ஆனால் குல்தீப் தற்போது நாட்டின் சிறந்த மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை."
"அவரது மன உறுதி அதிகமாக உள்ளது, ஆனால் அவருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஆழ்மனதில் அவரும் யோசிக்க வேண்டும் - எல்லாவற்றிற்கும் மேலாக, அவரும் ஒரு மனிதர்தான். அவர் மான்செஸ்டரில் இந்திய அணிக்கு ஒரு முக்கியமான வீரராக இருக்க முடியும்."
"குல்தீப் யாதவ் தற்போது சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஒருநாள் உலகக் கோப்பையின் போது அவர் அபாயகரமானவராக இருந்தார், மேலும் போட்டி முழுவதும் சிறப்பாக பந்துவீசினார். சரியான தருணங்களில் அவரை அணியில் சேர்க்காதது இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் அல்லது பும்ரா போன்ற ஒருவரிடம் 100 ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது - அது யதார்த்தமற்றதாக இருக்கும்." என்று கூறினார் கபில் தேவ் பாண்டே.