மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் நம்பினர். ஆனால் குல்தீப் 5 டெஸ்ட் போட்டியிலும் பெஞ்சில் தான் அமர்ந்திருந்தார். ஒரு போட்டியில் கூட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சுழற்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளத்திலும் கூட வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. இடது கை லெக் ஸ்பின்னரான குல்தீப் யாதவ், 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை வெறும் 13 போட்டியிலே தான் விளையாடி இருக்கின்றார்.

இந்த நிலையில் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியில் வாய்ப்பு வேண்டும் என்றால் குல்தீப் யாதவ் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பா அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், குல்தீப் டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் அவர் தன்னுடைய பேட்டிங்கை பலப்படுத்த வேண்டும்.
குல்தீப் யாதவ்க்கு பேட்டிங் சரியாக வராது என்பதால் அவர் நீக்கப்பட்ட பின்பும் எந்த ஒரு ரசிகர்களும் கேப்டனையும் அணி பயிற்சியாளரையும் நோக்கி கேள்வியை எழுப்பவில்லை. குல்தீப் பந்துவீச்சு திறமை குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பேட்டிங்கை பொறுத்த வரை அது அவருடைய பலம் கிடையாது. ஆனால் தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலையில் நாம் அதிக பங்களிப்பை செலுத்தினால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கின்றது.
அஸ்வினை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து ஆறு சதம் அடித்திருக்கின்றார். எட்டாவது அல்லது ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கி அஸ்வினால் முடிகிறது என்றால் மற்ற வீரர்களாகவும் முடியும் அஸ்வினின் அந்தத் தகுதியால் தான் அவர் அதிக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடினார் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பேட்டிங் திறமைக்காக தான் அணியில் சேர்க்கப்பட்டார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா உடன் இணைந்து அவர் சதம் அடித்தார். அது மட்டும் இல்லாமல் கடைசி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த அரைசதம் தான் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. அந்த தொடரில் பந்துவீச்சில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் மொத்தமாக 254 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 47 என்ற அளவில் இருந்தது.