ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது இளம் வீரர்களை நோக்கி செல்கிறது.
இதன் காரணமாக ரஹானே, புஜாரா போன்ற வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. புஜாராவுக்கு 35 வயது தான் ஆகிறது என்றாலும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார்.

இருந்தும் அவருக்கு அணியில் இடம் கொடுக்காமல் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஏற்கனவே ஒரு நாள், டி20 என இரண்டு கிரிக்கெட்டிலும் உள்ள நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவருக்கு தேவையில்லாமல் இடம் வழங்கி மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.
இன்னும் சொல்லப்போனால் சர்பிராஸ்கான் தற்போது மீண்டும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார். இதேபோன்று ரஜத் பட்டிதாரும் தொடர்ந்து ரன்களை வாரிக் குவித்து வருகிறார். ரோகித் சர்மாவின் கூற்றுப்படி இனி சீனியர்களுக்கு இடமில்லை என்றாலும் ஜூனியர் வீரர்கள் சர்பிராஸ்கான் மற்றும் ரஜத் பட்டிதார் போன்ற பல பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு நாள், டி20 என இரண்டு கிரிக்கெட்டிலுமே கில், ஸ்ரேயாஸ் தங்களுக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் இவ்விரு கிரிக்கெட்டிலும் தங்களுக்கு என தனி பெயரை வாங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் தேவையில்லாமல் அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வைத்து அதில் அவர்கள் சொதப்பிய பிறகும் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் சர்பிராஸ்கான் ரஜத் பட்டிதார் ஆகியோர் இந்திய அணிக்காக ஒரு முறை கூட விளையாடியது இல்லை. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது இதுபோன்ற வீரர்களை பிசிசிஐ பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ், கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக ஒரு முறை கூட 40 ரன்கள் அடிக்கவில்லை.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக 87 ரன்கள் அடித்தார்.அதன் பிறகு அவர் அடித்த ஸ்கோர்கள் விவரங்களை தற்போது பார்க்கலாம் 29, 4 ,12 ,0,26,31, 6,0,4,35 ஆகிய ரன்கள் தான் அவர் அடித்திருக்கிறார். இதில் ஒரு முறை கூட அவர் 40 ரன்கள் கடக்கவில்லை. இப்படி இருக்க தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்குவது நியாயமா என்ற கேள்வி எழுந்துள்ளது.