இதுதான் மரியாதையா? அஸ்வினுக்கு திமிர் அதிகம்.. யாரையும் மதிக்க மாட்டார்.. சிவராமகிருஷ்ணன் ட்வீட்!
சென்னை : அஸ்வினுக்கு சீனியர்களை மதிக்க தெரியாது என்று முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ள ட்வீட்கள் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”அஸ்வின் ஒரு சுயநல கிரிக்கெட் வீரர்” என்று காட்டமாக விமர்சித்தவர் முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன். SENA நாடுகளில் அஸ்வின் எத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்று பாருங்கள், தோனி மட்டும் இல்லையென்றால் அஸ்வின் இந்திய அணிக்குள் வருவதற்கு கூடுதல் காலம் எடுத்திருக்கும். நன்றாக விளையாடிய ஹர்பஜன் கூடுதல் காலம் இந்திய அணியில் இருந்திருப்பார் என்று விமர்சித்திருந்தார்.

சிஎஸ்கே அணியில் விளையாடிய பின்னர் தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம் கிடைத்த பின், இந்திய சிமெண்ட்ஸ் அணியில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு விஸ்வாசம் என்றால் என்னவென்றே தெரியாது. நிச்சயம் அவருக்கு கோயில் கட்ட வேண்டும். ஏனென்றால் மாநில அளவிலான கிரிக்கெட் தொடர் ஒன்றில் லெக் ஸ்பின்னராக விளையாடியவர். வேறு யாராவது அஸ்வின் இடத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்கள் என்று கூறி இருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் அளித்த பேட்டி, அஸ்வினை கடினமாக பாதித்தது. இருந்தாலும் அஸ்வின் வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் களமிறங்குவதன் மூலம் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இதற்காக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியுடன் பயணிக்கும் பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன், அஸ்வினை பாராட்டி வாழ்த்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு கீழ் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், 100வது டெஸ்டில் விளையாடப் போகும் அஸ்வினை வாழ்த்துவதற்காக சில முறை கால் செய்தேன். அவர் அதனை கட் செய்தார். பின்னர் அவருக்கு மெசேஜ் செய்தேன். அதற்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை. முன்னாள் வீரர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை இதுதான் என்று பதிவிட்டார்.
தொடர்ந்து ரசிகர்கள் சிலர் அஸ்வினுக்கு ஆதரவாக சிவராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்தனர். அதற்கு அவர், மரியாதை என்பது பண்பட்ட மனிதர்களிடம் மட்டுமே கிடைக்கும். முன்னதாக நான் அஸ்வினின் பவுலிங் ஆக்ஷனில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தான் பதிவிட்டேனே தவிர, அவரை விமர்சிக்கவில்லை. இதனை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்கள் சோசியல் மீடியால் ட்ரெண்டாகி வருகின்றன.
Story first published: Wednesday, March 6, 2024, 13:53 [IST]
Other articles published on Mar 6, 2024


Click it and Unblock the Notifications