மான்செஸ்டர்: என்ன நடந்தாலும், அடுத்தப் போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என்று இந்திய அணி வீரர்களுக்கு நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அறிவுறுத்தியுள்ளார். அழுத்தமான நேரங்களில் இந்திய அணி ரசிகர்கள் ஒவ்வொரு வீரருக்கும் பின்னால் நின்று ஆதரவளிப்பது நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய ரிஷப் பண்ட், நாட்டிற்காக விளையாடுவது பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்திருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய 5 இடதுகை பேட்ஸ்மேன்களும் அசத்தியுள்ளனர். ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகிய 5 பேரும் ஒரு இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தி இருக்கின்றனர்.

அதிலும் ரிஷப் பண்ட் ரத்தம் சொட்டச் சொட்ட காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடி அரைசதம் அடித்தது இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன்பின் ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. அதேபோல் நேற்றைய ஆட்டம் முடிவடைந்த பின், ரிஷப் பண்ட் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்ஸில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் உட்பட ரிஷப் பண்ட் 474 ரன்களை விளாசி இருக்கிறார். ரிஷப் பண்ட் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், துருவ் ஜுரெல் 2 போட்டிகளாக விக்கெட் கீப்பிங் மட்டுமே செய்து வருகிறார். இதனால் அவருக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் நாடு திரும்புவதற்கு முன்பாக இந்திய அணி வீரர்களுடன் பேசுகையில், இந்திய அணியின் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே காயத்துடன் ஆடினேன். எப்போதும் சொந்த சாதனைகளை விடவும், இந்திய அணி வெல்ல வேண்டும் என்பது மட்டுமே எங்களின் இலக்காக இருந்துள்ளது. அதுதான் எனக்கும் தேவையான ஒன்று.
அதேபோல் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன், வீரர்கள் என்று அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணி அழுத்தமான சூழலில் இருக்கும் போது, ஒட்டுமொத்த நாடும் நம் பின்னாடி நிற்கும். அந்த எமோஷனை எளிதாக விளக்கி கூற முடியாது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வருவது பெருமையாக உள்ளது.
இந்திய அணிக்கு நான் கொடுக்கும் ஒரேயொரு மெசேஜ் இதுதான். அடுத்தப் போட்டியில் வெல்ல வேண்டும். நாட்டுக்காக வெல்வோம் என்று தெரிவித்துள்ளார். ரிஷப் பண்டின் பேச்சு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரிஷப் பண்ட்-க்கு மாற்று வீரராக தமிழக வீரர் ஜெகதீசன் தேர்வு செய்து அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.