லண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் மோசமான ஃபீல்டிங், இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு முறை அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பி அரைசதம் கடந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 40 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜோஷ் டங் வீசிய 14வது ஓவரில் ஒரு ஷார்ட் பாலை எதிர்கொண்டார்.
அதனைப் புல் ஷாட் அடிக்க முயன்றபோது, பந்து சரியாக பேட்டில் படாமல் லாங் லெக் திசையில் இருந்த லியாம் டாசன் கைகளுக்கு நேராகச் சென்றது. அது மிகவும் எளிதான கேட்ச் ஆகும். ஆனால், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் டாசன் அந்தக் கேட்ச்சை தவறவிட்டார்.

இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலுக்குக் கிடைத்தது இது இரண்டாவது வாய்ப்பு. முன்னதாக, அவர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ஹாரி புரூக் தவறவிட்டார். இப்படி இரண்டு முறை கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஜெய்ஸ்வால், தொடர்ந்து அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் அரைசதம் கடந்தார். குறிப்பாக, கீப்பரின் தலைக்கு மேல் அவர் அடித்த ஒரு சிக்ஸர், அவரது திறனை காட்டியது.
இங்கிலாந்து அணியின் இந்த ஃபீல்டிங் சொதப்பல்கள் முதல் முறை அல்ல. இந்தத் தொடர் முழுவதும் பல கேட்ச்களை தவறவிட்டுள்ளனர். இதே போட்டியில், சாய் சுதர்சன் 7 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சையும் ஜாக் கிராலி தவறவிட்டார். இருப்பினும், சுதர்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்ததால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஜெய்ஸ்வாலுக்குக் கொடுத்த இரண்டு வாய்ப்புகளும் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமையக்கூடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து, 52 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் இந்தத் தொடர் தவறுகளால், சமநிலையில் செல்ல வேண்டிய போட்டி தற்போது இந்தியாவின் பக்கம் சாய்ந்துள்ளது.