லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் முன்னணி வீரர்கள் பலரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். ஆனால் அனுபவ வீரர் கருண் நாயர் மட்டும் தனியாக நின்று போராடி அரை சதம் அடித்துள்ளார்.
98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 52 ரன்கள் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதில் ஏழு பவுண்டரிகள் அடங்கும்.வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நெருக்கடியான சூழ்நிலையில், கருண் நாயர் தன்னுடைய அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் டிசம்பர் மாதம் முச்சதம் அடித்திருந்தார்.

அதன் பிறகு பெரிய ஸ்கோர் அடிக்காததால் அணியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த தருணத்தில் கருண் நாயருக்கு மீண்டும் கௌதம் கம்பீர் வாய்ப்பு வழங்கினார்.அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். எனினும் கருண் நாயர், தன்னுடைய அரை சதத்தை பெரிய சதமாக மாற்றினால் அணியில் அவருடைய இடத்திற்கு எந்த பங்கமும் வராது. இதனிடையே கடந்த 25 ஆண்டுகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அரை சதத்திற்கும் (50+ ஸ்கோர்) அடுத்த அரை சதத்திற்கும் (50+ ஸ்கோர்) இடையே அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்திய வீரர் பார்த்திவ் பட்டேல். பார்த்திவ் பட்டேல் தன்னுடைய அரை சதத்தை 2004 ஆம் ஆண்டு அடித்தார். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு தான் அடுத்த அரை சதத்தை நிறைவு செய்தார். இதற்காக அவர் 12 ஆண்டுகள் 43 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளார். அதேபோன்று பாகிஸ்தான் வீரர் பவத் ஆலம், 11 ஆண்டுகள் 167 நாட்கள் கழித்து தன்னுடைய அடுத்த அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
அதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் 9 ஆண்டுகள் 289 நாட்கள் கழித்து தன்னுடைய அடுத்த அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்த பட்டியலில் கருண் நாயர் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவர் 8 ஆண்டுகள் 227 நாட்கள் எடுத்துக்கொண்டு அடுத்த அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஜிம்பாப்வே வீரர் சிக்கும்பூரா இருக்கின்றார். அவர் எட்டு ஆண்டுகள் 150 நாட்கள் கழித்து தன்னுடைய அடுத்த அரை சதத்தை பூர்த்தி செய்தார்.