லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மாபெரும் டெஸ்ட் சாதனை ஒன்றை செய்துள்ளனர்.
இந்த டெஸ்டில் வீழ்ந்த 40 விக்கெட்டுகளில், 15 விக்கெட்டுகள் 'பவுல்ட் அவுட்' முறையில் வீழ்த்தப்பட்டுள்ளன. இது 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச 'பவுல்ட் அவுட்' விக்கெட்டுகள் ஆகும். இந்த சாதனையில் இந்திய பந்துவீச்சாளர்களின் பங்கு அதிகம்.

இந்தப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 15 'பவுல்ட் அவுட்' விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், இந்தியாவின் ஆகாஷ் தீப் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரை மட்டுமே 'பவுல்ட் அவுட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்தனர்.
லார்ட்ஸ் ஆடுகளத்தின் சீரற்ற பவுன்ஸ் மற்றும் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஸ்டம்புகளைக் குறிவைத்து பந்துவீசியதே இந்த சாதனைக்கு முக்கியக் காரணம். இதற்கு முன்பு, 21 ஆம் நூற்றாண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 13 'பவுல்ட் அவுட்' விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்த நிகழ்வு நான்கு முறை நடந்துள்ளது.
2005ல் வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா, 2012ல் பாகிஸ்தான் - இங்கிலாந்து, மற்றும் 2015ல் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகளில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது லார்ட்ஸ் டெஸ்ட் அந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டபோதும் இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியதை அடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்க்ஸில் இரண்டு அணிகளும் சரி சமமாக 387 ரன்கள் எடுத்து இருந்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது.