லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில், இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் இந்தியாவை வீழ்த்துவார்கள் என இங்கிலாந்து துணைப் பயிற்சியாளர் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் நம்பிக்கை தெரிவித்திருந்தார். அவரது பேச்சுக்கு வாஷிங்டன் சுந்தர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவிற்குப் பிறகு பேசிய ட்ரெஸ்கோதிக், "நாளைய ஆட்டத்தின் முதல் மணி நேரம் முக்கியமானதாக இருக்கும். இந்திய வீரர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்பதைப் பொறுத்தே ஆட்டம் அமையும். நாளைய ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரத்திலேயே மீதமுள்ள ஆறு விக்கெட்டுகளையும் நாங்கள் கைப்பற்றுவோம் என நம்புகிறோம்" என்று கூறினார்.

ட்ரெஸ்கோதிக்கின் இந்தக் கருத்துக்கு இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பதிலடி கொடுத்துள்ளார். ஆட்டத்தின் வெற்றி குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் புன்னகையுடன், "நிச்சயமாக இந்தியா நாளை மதிய உணவிற்குப் பிறகு வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் கூறினார். மேலும், "தற்போது நாங்கள் இருக்கும் நிலைமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஒருவேளை ஒரு விக்கெட் குறைவாக இழந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்றும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் தங்களது முதல் இன்னிங்ஸில் தலா 387 ரன்கள் எடுத்தன. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, வாஷிங்டன் சுந்தரின் அபாரமான பந்துவீச்சால் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுந்தர் 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
193 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கே.எல். ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். போட்டியின் கடைசி நாளில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.