மும்பை : இந்திய அணியின் விராட் கோலியின் சொந்த வாழ்க்கை குறித்து தவறான தகவலை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோருவதாக முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் திடீரென விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதுகுறித்து பிசிசிஐ தரப்பில், சொந்த காரணங்களால் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகுகிறார். அதற்கு ரசிகர்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளை தவறவிடாத விராட் கோலி, ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார் என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் இடத்தை இரு போட்டிகளிலும் எந்த வீரராலும் ஈடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
இதனிடையே விராட் கோலியின் நெருங்கிய நண்பரான ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. இதன் காரணமாகவே விராட் கோலி டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
ஆனால் விராட் கோலியோ, அனுஷ்கா சர்மாவோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் பேசுகையில், கிரிக்கெட்டை விடவும் எப்போதும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேபோல் நான் மோசமான தவறு ஒன்றை செய்துவிட்டேன். விராட் கோலி குறித்து கூறிய தகவல் உண்மையல்ல. விராட் கோலியின் விலகலுக்கான காரணம் யாருக்கும் தெரியாது.
அவர் உடல்நலன் மற்றும் மனநலன் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உலகமே விராட் கோலியின் கிரிக்கெட்டை பின் தொடர்கிறது. அவரின் விடுப்புக்கு காரணம் என்னவாக இருந்தாலும், நிச்சயம வர் சிறந்த கம்பேக்கை கொடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.