லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு காரசார விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் எந்த அணி முன்னிலை பெறுகிறதோ அது அவருடைய வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால் இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் இரு அணிகளும் எடுத்து சமன் செய்தது.

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி எவ்வளவு ரன்கள் அடிக்கிறார்களோ அதற்கு மேல் எடுத்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற முடியும். இந்த தருணத்தில் ஒவ்வொரு ரன்னும், ஒவ்வொரு நிமிடமும் மிகவும் முக்கியமானதாகும். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆட்டம் இழந்தவுடன் இங்கிலாந்து அணிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஓவர்கள் வீசி நெருக்கடி கொடுக்க வேண்டும் என இந்தியா திட்டமிட்டது.
ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே களத்திற்கு இரண்டு நிமிடம் தாமதமாக வந்தனர். அப்போது இந்திய வீரர்கள் கடுப்பாகி நின்றனர். சரி எப்படியாவது இரண்டு ஓவரை வீசி விட வேண்டும் என பும்ரா தனது ஓடும் தூரத்தை குறைத்துக் கொண்டு பந்து வீசினார். அப்போது களத்தில் நின்ற ஜாக் கிராலி வேண்டுமென்றே பும்ராவை தடுத்து நிறுத்தி சைட் ஸ்கிரீனில் யாரோ செல்கிறார்கள் என்பது போல் பாவ்லா காட்டி வந்தார்.
இதேபோன்று மீண்டும் சாக் கிராலி செய்தபோது இந்திய அணி வீரர்கள் கடுப்பானார்கள். அப்போது ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த இந்திய அணி கேப்டன் கில், பந்தை ஒழுங்காக பார் என்று கெட்ட வார்த்தை பயன்படுத்தி ஜாக் கிராலியை கடுமையாக திட்டினார். அப்போது ராகுல், சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் ஜாக் கிராலியை கண்டித்தனர்.
இதனை அடுத்து மீண்டும் பும்ரா வீசியபோது அந்த பந்து கையில் அடித்து விட்டதாக கூறி மருத்துவ உதவியை ஜாக் கிராலி நாடினார். இதனால் இந்திய வீரர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜாக் கிராலியும் பதிலுக்கு திட்டினார். இதை அடுத்து கில் ஜாக் கிராலியுடன் சென்று மோதிக் கொள்வது போல் நின்றதால் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை கையை மீறுவதை அறிந்த நடுவர்கள் உடனே இரு அணி வீரர்களையும் சமாதானப்படுத்தி ஓவரை முடிக்க அறிவுறுத்தினர். இதை அடுத்து மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி இரண்டு ரன்கள் எடுத்தது. ஆட்டம் முடிந்தவுடனும் ராகுல்,சிராஜ், கில் ஆகியோர் இங்கிலாந்து வீரர்களை கிண்டல் அடித்து வந்தனர் .