கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்திய அணி தோல்வியை பெறாமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2023 ஆம் ஆண்டு 50 உலகக் கோப்பையில் பைனலுக்கு வந்த இந்தியா தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அதேபோல் தோல்வியை தழுவாமல் இறுதி போட்டிக்கு வந்திருக்கிறது.
இது மற்ற நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வயிறு எரிய வைத்திருக்கிறது. பலரும் இந்தியாவுக்கு சாதகமாக அனைத்து சூழல்களும் மாற்றப்படுவதால் தான் இந்திய அணி வெற்றி பெறுவதாக குற்றச்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக அரையிறுதி போட்டியில் மற்ற அணிகள் எங்கு விளையாடப் போகிறது என்று தெரியாமல் இருந்த சூழலில் இந்தியாவுக்கு மட்டும் அரையிறுதி ஆட்டம் கயானாவில் நடைபெறப்போகிறது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாஹன் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டியது. இங்கிலாந்து பேட்டிங் செய்த அதே மைதானத்தில் தான் இந்தியாவும் பேட்டிங் செய்து 171 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் பல்வேறு விமர்சனங்களை ரோகித் படை தவிடுப்பிடியாக்கியது. இதனால் முதலில் இந்தியாவை விமர்சித்த மைக்கேல் வாஹன்,தற்போது காலில் விழுந்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ள அவர், இறுதிப்போட்டிக்கு செல்ல இந்தியா முழு தகுதியும் உடைய அணி என்று பாராட்டி உள்ளார்.மேலும் இந்த தொடரிலே மிகச்சிறந்த அணியாக இந்தியா இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இந்த ஆடுகளத்தில் விளையாடுவது என்பது இங்கிலாந்துக்கு நிச்சயம் கடினமாக தான் இருக்கும் என்று குறிப்பிட்ட வாஹன், இந்தியா இது போன்ற ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருப்பதாக கூறினார். இதேபோன்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் நாசர் உசைன் கருத்து தெரிவிக்கையில், இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல சரியான அணி. அவர்கள் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் ஆடுகளத்திலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றி பெற்றிருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் பேட்டிங்கிற்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ஆடுகளங்களிலும் தோல்வியை தழுவாமல் வந்திருக்கிறார்கள் என்று பாராட்டிருக்கிறார்.