மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி தோல்வியடையும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து இந்திய அணியை குறி வைத்து விமர்சித்து வரும் அமீரின் இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடையும் என முகமது அமீர் கணித்திருந்தார். ஆனால் அவரது அந்த கணிப்பு தவறாக முடிந்தது. இந்திய அணி அந்த நாக் அவுட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனாலும் அவர் மீண்டும் இந்திய அணியின் ஆட்டம் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்திய அணி ஒரு குழுவாகச் சிறப்பாகச் செயல்படவில்லை என்றும், இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மும்பை வான்கடே ஆடுகளம் அதிக ரன்கள் குவிக்கக்கூடிய ஒரு மைதானம் என்பதால், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசி, இரண்டாவதாக பேட்டிங் செய்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்துப் பேசிய முகமது அமீர், அணியில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வீரர் மட்டும் ஆட்டத்தின் இறுதி வரை நின்று ரன்களைச் சேர்த்தாலும், ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் ஃபார்மில் இல்லை என்பதே உண்மை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டுமே இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஃபார்மில் இல்லாமல் தவித்து வருகிறார். திலக் வர்மாவும் இதுவரை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சூப்பர் 8 சுற்றுக்கு வந்ததில் இருந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்று முகமது அமீர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் அணியில் உள்ள குறைகளை வைத்துப் பார்க்கும்போது, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என உறுதியாகக் கூற முடியாது என அமீர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளையும் ஒப்பிடுகையில், இன்றைய அரையிறுதியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அந்த அணியே வெற்றி பெறும் என்றும் அவர் தனது கணிப்பைக் கூறியுள்ளார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி போன்ற முக்கியமான தருணத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இவ்வாறு தொடர்ச்சியாக இந்திய அணியைக் குறை கூறி வருவது பேசுபொருளாகியுள்ளது.