லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்கள் என்ற இலக்கை எட்டிய நிலையில் ஜடேஜா மற்றும் கே எல் ராகுலை தவிர வேறு எந்த ஒரு பேட்ஸ்மேனும் 20 ரன்களை தாண்டவில்லை. இதுவே தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதிரடியாக விளையாடக்கூடிய ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ஒரு ஷாட் ஆடி ஆட்டம் இழந்தார். இதேபோன்று காலுக்கு வந்த பந்தை கருண் நாயர் லீவ் செய்ய அது அவரை lbw ஆக்கியது. இதேபோன்று கடந்த டெஸ்ட் போட்டியில் தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்சை ஆடிய கில்லும், ரசிகர்களை ஏமாற்றினார்.
கே எல் ராகுல் கடுமையாக போராடினாலும், அவரால் 39 ரன்களை தாண்ட முடியவில்லை. அதேபோன்று ரிஷப் பண்ட் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன், நாம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இரண்டாவது இன்னிங்ஸில் நாம் பாசிட்டிவ் ஆக பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் நான்காவது நாள் இறுதியிலேயே நாம் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அப்படி இருக்கும் போது ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்து இலக்கை ஏட்டுவது என்பதெல்லாம் முடியாத காரியம் தான். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நாம் சில பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும்.
இந்தப் போட்டிக்கு பின்னாவது இந்திய வீரர்களுக்கு புத்தி வரும் என நம்புகிறேன். ஆனால் இந்திய அணியின் கீழ் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடி தைரியமான ஒரு ஆட்டத்தை ஆடினார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக ஜடேஜா சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.
ஆனால் ஜோ ரூட் மற்றும் பஷீர் ஓவரில் ஜடேஜா கூடுதலாக ஒரு 15, 20 ரன்கள் அடித்திருந்தால், அவருடைய பணி மேலும் எளிதாக மாறி இருக்கும். ஆனால் அவருடைய பேட்டிங்கை நாம் குறை சொல்லக்கூடாது. ஏனென்றால் அவர் மட்டும்தான் இறுதி நாளில் பாறை போல் களத்தில் நின்று அணியை காப்பாற்ற முயற்சி செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் நாம் பல தவறுகளை செய்து விட்டோம். முக்கியமாக இங்கிலாந்து அணி பவுலர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்த நாம் வழிவகையை ஏற்படுத்தி விட்டோம் என்று அசாருதீன் கூறியுள்ளார்.
