ஐதராபாத்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விராட் கோலி,ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.
கடைசி இன்னிங்சில் 371 ரன்கள் வெற்றிக்காக இந்திய அணி நிர்ணயிக்கும். சுப்மன் கில் கேப்டன்ஷியில் செய்த தவறால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக பலரும் குற்றச்சாட்டி இருந்தனர்.இந்த நிலையில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வைத்து சுப்மன் கில், கேப்டன்ஷி தன்மையை மதிப்பிடுவது தவறு என முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இதுதான் கில்லுக்கு கேப்டனாக முதல் போட்டி, அதில் அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது குறித்து பேசுவதே தப்பு என்று நினைக்கின்றேன். அவருடைய கேப்டன்சி திறன் குறித்து இவ்வளவு சீக்கிரம் மதிப்பிட கூடாது."
"குறைந்தபட்சம் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர் தற்போது தான் அணியை வழி நடத்துகிறார். அவருக்கு அதிக காலம் மற்றும் ஆதரவை ரசிகர்கள் வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோல் வீரர்களை நாம் குறை கூறக்கூடாது. நாம் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் கீழ் வரிசையில் வீரர்கள் சொதப்பியதுதான்."
"எனினும் அதற்கு நாம் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். பவுலிங் நல்ல முறையில் இருக்க வேண்டும். இதேபோன்று இந்திய அணி பும்ராவை மிகவும் சார்ந்து இருக்கிறது. அது தவறு என நான் நினைக்கின்றேன். உங்களுக்கு அனுபவம் வாய்ந்த பல பவுலர்கள் அணியில் இருக்க வேண்டும்."
"இதேபோன்று இரண்டாவது டெஸ்டில் குல்தீப் யாதவை வைத்து விளையாட வேண்டும்" என்று அசாருதீன் கூறியுள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.