சென்னை : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி, சென்னை போட்டிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. கடைசியாக 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முகமது ஷமி பங்கேற்றார். அதன் பிறகு காயம் காரணமாக எந்த ஒரு தொடரிலும் விளையாடாமல் உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் இருந்தார்.
இந்த சூழலில் ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். முதல் டி20 யில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் ஷமி நிச்சயம் இடம் பெறுவார் என தெரிகிறது.
முதல் டி20 போட்டியில் அணியில் இருந்த நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே எதையும் செய்யவில்லை. ஆனால் ஒரு அபாரமான கேட்சை பிடித்தார். இதனால் நிதிஷ் குமார் ரெட்டி நீக்கப்பட்டு அவருக்கு பதில் முகமது ஷமி சேர்க்கப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய அணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
அபிஷேக் ஷர்மா இடத்தில் திலக் வர்மா விளையாட கூடும். இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்கலாம். இல்லையென்றால் அபிஷேக் ஷர்மாவுக்கு பதில் ஷமி விளையாடலாம். இதன் மூலம் திலக் வர்மாவும் மூன்றாவது அல்லது நான்காவது வீரராக நிதீஷ்குமார் ரெட்டியும் விளையாட கூடும்.