ராஜ்கோட்: இந்திய டி20 அணியில் முகமது ஷமி இடம் பெற்றுவிட்ட பிறகும் அவர் போட்டிகளில் விளையாடவில்லை, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சை வழி நடத்தும் பொறுப்பு முகமது ஷமிக்கு தான் இருக்கிறது. அவர்தான் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளராக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இருக்கிறார்.
அதே சமயம் நீண்ட காலமாக காயத்தில் இருந்து, தற்போது மீண்டு வந்து இருக்கும் ஷமிக்கு சர்வதேச போட்டி பயிற்சி அவசியமாக இருக்கிறது. அதற்காகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு நாள் தொடரிலும் முகமது ஷமி சேர்க்கப்பட்டு இருக்கிறார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஷமி விளையாடவில்லை.

ஏன் அவரை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தவில்லை? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் முக்கிய தகவலை கூறி இருக்கிறார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தான் அவரை ஆட வைக்காமல் வெளியே அமர வைத்திருக்கிறார்கள் என வெளிப்படையாகவே அவர் கூறினார்.
முகமது ஷமி முழு உடற் தகுதியுடன் இருப்பதாகவும், அதே சமயம் அவரது பணிச்சுமையை நிர்வகிக்கும் வகையில் பயிற்சியாளரும், கேப்டனும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். ஆனால், இதுவரை சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருக்கும் முகமது ஷமி எப்படி அதிக பணிச்சுமையை பெறுவார்? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
உண்மையில் ஷமியின் பணிச் சுமையை சரியாக கையாள வேண்டும் என்றால், இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவரை ஆட வைத்துவிட்டு, அதன் பின் அவருக்கு ஓய்வு அளித்து இருக்க வேண்டும். அடுத்து ஒரு நாள் தொடரில் ஷமிக்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும்.
ஆனால், அதற்கு நேர் மாறாக டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அல்லது ஒரு போட்டியில் மட்டுமே முகமது ஷமி விளையாடுவார் என கூறப்படுகிறது. அதன்பின் அவர் ஒருநாள் தொடரிலும் பங்கேற்பார். அதை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முகமது ஷமி விளையாட வேண்டி வரும்.
அப்படி என்றால் ஷமி தொடர்ந்து ஏழு, எட்டு போட்டிகளில் விளையாடுவது போன்ற சூழ்நிலை ஏற்படும். அப்போதுதான் அவரது பணிச்சுமை அதிகரிக்கும். அந்த வகையில் பார்த்தால் முகமது ஷமியை இதுவரை ஏன் ஆட வைக்கவில்லை? என்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்து இருக்கின்றன. அவர் இன்னும் முழு உடற் தகுதியை பெறவில்லையா அல்லது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஷமியை கையாள்வதில் தவறான முடிவை எடுத்து இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.