லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆண்டர்சன்- டெண்டுல்கர் கோப்பையை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
விராட் கோலி,ரோகித் சர்மா, அஸ்வின், முகமது சமி உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் இல்லாமல் கில் தலைமையில் இந்திய அணி களம் இறங்கி இத்தகைய சாதனையை படைத்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா வென்றது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி மீண்டும் இங்கிலாந்து வெற்றிகொடியை நாட்ட நான்காவது டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்டில் இந்தியா வென்று தொடரை சமன் செய்திருக்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தது.
இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது. இதனால் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. 106 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து தடுமாறிய போது, ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் அபாரமாக விளையாடி 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.
இருவரும் சதம் அடித்த நிலையில் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இது போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த தருணத்தில் 339 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 35 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகளும் தேவைப்பட்டது.
இந்த தருணத்தில் சிராஜ் ஆக்ரோஷமாக பந்து வீசி ஜெமி ஸ்மித் விக்கெட்டை இரண்டு ரன்களில் கைப்பற்ற, ஜெமி ஓவர்டன் ஒன்பது ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். இதேபோன்று ஜாஸ் டாங்க், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் டக் அவுட் ஆக கடைசி விக்கெட்டுக்கு கிறிஸ் வொக்ஸ் தனது உடைந்த கையோடு பேட்டிங் செய்ய வந்தார். இதனால் இந்திய அணி வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் இங்கிலாந்தின் வெற்றிக்கு 17 ரன்களும் தேவைப்பட்டது.
அட்கின்சன் தனி ஆளாக நின்று போராடி சிக்ஸர் அடித்தார். இதனால் போட்டியில் விறுவிறுப்பு பற்றி கொண்டது. உடைந்த கையோடு கிறிஸ் வொக்ஸ் பந்துகளை எதிர் கொள்ளக்கூடாது என்ற பாணியில் அட்கின்சன் விளையாடினார். எனினும் சிராஜ் தன்னுடைய ஆக்ரோச பந்துவீச்சால் அட்கின்சன் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி 367 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் ஆனது. சிறப்பாக பந்து வீசிய சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.