லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை ஜோக்கர் என ரவி சாஸ்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓவர்கள் வீசிய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்திலும், சிராஜ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் தற்போது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருவரும் இருக்கின்றனர்.

பிர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லாமல் சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மட்டும்தான் அபாரமாக பந்து வீசி வெற்றியை பெற்றனர். இந்த சூழலில் லண்டன் லார்ட்சில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரவி சாஸ்திரி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்போது சிராஜ் களத்தில் பேஸ் பால் குறித்து ஆலிபோப்பிடம் கிண்டல் செய்ததை சுட்டிக்காட்டி சிராஜ் எப்படிப்பட்ட மனிதர் என்று ரவி சாஸ்திரியிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஆத்தர்ட்டன் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி, "ஆம், சிராஜ் ஒரு ஜோக்கர். அவர் யாரையும் கிண்டல் செய்ய மாட்டார். ஆனால் பலரும் அவரை கிண்டல் செய்து சிரிப்பார்கள். அவரை எப்போது கிண்டல் செய்தாலும் சிராஜ் சிக்கிக் கொள்வார். பண்டும் சிராஜும் ஒரே மாதிரி தான். அவர்கள் இருவரும் இருந்தால் ட்ரெஸ்ஸிங் ரூம் சிரிப்பாக இருக்கும்."
"குறிப்பாக சிராஜுக்கு டிஎஸ்பி பதவி கிடைத்தது. அதை வைத்து டிரெஸ்ஸிங் ரூமில் பலரும் சிராஜை கிண்டல் செய்வார்கள். அப்போது சிராஜ் எங்களைப் பார்த்து ஹைதராபாத் வந்து பாருங்கள். நான் உங்களை ஒரு கை பார்க்கிறேன் என்று சொல்லி எங்களை மிரட்டுவார். சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்."
"இன்றும் கூட அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்" என்று ரவி சாஸ்திரி கூறினார். இந்த சூழலில் சிராஜை ஜோக்கர் என அவர் விமர்சித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், நமது நாட்டு வீரர்களை நாமே வெளிநாட்டு ஊடகங்களிடம் விட்டுக் கொடுக்கலாமா? ரவி சாஸ்திரி தனது வார்த்தையை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அண்மையில் தோனியின் விக்கெட் கீப்பிங் ஸ்டைலை பிக்பாக்கெட் உடன் ஒப்பிட்டு ரவி சாஸ்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.