லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் தொடர் சமனில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பாரம்பரியமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சிராஜ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு சுமார் ஒரு வார ஓய்வுக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி தொடங்கி ஆறாம் தேதி வரை நடைபெற்றது.

இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வெறும் 3 நாள் அடிப்படையில் மீண்டும் தொடங்க இருக்கிறது. இது இரு அணி வீரர்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 25 ஓவரும் இரண்டாவது இன்னிங்சில் 19 ஓவர்கள் வீசி இருந்தார்.
இதனால் அவருக்கு பணிச்சுமை ஏற்படும் என்ற காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு லண்டன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. இந்த தருணத்தில் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆன சிராஜ் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் 41 ஓவர்கள் வீசி இருக்கின்றார்.
இதில் சிராஜ் மொத்தமாகவே இரண்டு விக்கெட்டுகள் தான் வீழ்த்தி இருந்தார்.இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்தான் மெயின் பவுலராக இருந்தார். இதிலும் அவர் 32 ஓவர்களை வீசி இருக்கின்றார். இதில் மொத்தமாக அவர் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக அவர் 73 ஓவர்கள் வீசி இருக்கின்றார்.
இவ்வளவு அதிகமாக பந்து வீசி அடுத்த மூன்று நாட்களில் இன்னொரு டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது முடியாத காரியம். இதனால் சிராஜுக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இதற்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங்கை சேர்க்க இந்திய நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிகிறது.எனினும் சிராஜ் பாரம்பரியமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது.