பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் ஒரே ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியிருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து இந்திய அணி கேப்டன் கில் 269 ரன்கள் எடுக்க இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்சை 77 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 22 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் ஆனார்.
இதை அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் இறங்கினார். அவரும் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரிஷப் பண்டின் கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார். இதன் மூலம் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். சிராஜ் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு பறிபோனது. இதை அடுத்து இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்த சூழலில் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 43 இன்னிங்ஸில் 17 முறை ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கின்றார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 11 இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக அடித்த ரன்களே 47 தான்.
மேலும் இதில் ஐந்து முறை ஒற்றை இலக்கம் ரன்களில் அவர் ஆட்டம் இழந்துள்ளார். இதனால் இங்கிலாந்து அணியின் கேப்டன்களில் குறைந்தபட்சம் 1500 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மிகவும் குறைந்த சராசரி வைத்திருக்கும் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் இருக்கின்றார். தற்போது அவருடைய பேட்டிங் சராசரி 33.5 என்ற அளவில் இருக்கின்றது.