ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தரமான கம்பேக்கை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்திருந்தது. இதனிடையே தாயாரின் உடல்நிலை மோசமானதால், 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர ஸ்பின்னர் அஸ்வின் விலகினார்.

இதன் காரணமாக இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்களுடன் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் சொந்த மண்ணிலேயே விக்கெட் வீழ்த்திய முடியாமல் திணறியதால், 2வது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் அஸ்வின் இல்லாத சூழலில் யார் பொறுப்பை எடுத்து கொள்வார்கள் என்று ரசிகர்களிடையே பதற்றம் தொற்றிக் கொண்டது.
நேற்று ஓல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும், இன்றைய நாளில் சிராஜின் ஸ்பெல் வெறித்தனமாக அமைந்தது. பென் டக்கெட் ஆட்டமிழந்து வெளியேறிய பின், டெய்லண்டர்களை கொஞ்சம் கூட ரன்கள் சேர்க்கவிடாமல் அட்டாக் மேல் அட்டாக் செய்து கொண்டிருந்தார். இதனால் களத்தில் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறி கொண்டிருந்தனர்.
இறுதியாக பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத் மற்றும் ஆண்டர்சன் ஆகியோரின் விக்கெட்டை சில நிமிட இடைவெளியில் வீழ்த்தி இந்திய அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார் சிராஜ். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரே ஸ்பெல்லில் 6 விக்கெட்டை வீழ்த்தியது போல், இந்த போட்டியிலும் அபாரமான ஸ்பெல்லை வீசினார் சிராஜ்.
இதன் காரணமாக 21.2 ஓவர்களில் 84 ரன்கள் விட்டுக் கொடுத்த சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய 126 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அஸ்வின் இல்லாததை உணர்ந்து சிராஜ் சிறப்பாக பந்துவீசியதன் மூலமாக இந்திய மண்ணிலும் தன்னால் விக்கெட் வேட்டை நடத்த முடியும் என்று நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.