பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில், முகமது சிராஜ் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடாக் உடன் தனியாக பயிற்சி செய்தார். அது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில், ஒரு வேகப்பந்துவீச்சாளரான முகமது சிராஜ் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி இந்திய அணி வட்டாரத்தில் இருந்து சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் மோசமாக சொதப்பினர். அந்தப் போட்டியில் இந்திய அணி சுமார் 800 ரன்களுக்கும் மேல் எடுத்த போதும், அதில் நான்கு வீரர்கள் மட்டுமே பெரும்பாலான ரன்களை சேர்த்திருந்தனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதம் அடித்து சிறப்பாக ஆடியிருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஏமாற்றம் அளித்திருந்தனர். அதே சமயம், பின்வரிசை வீரர்களும் ஏமாற்றம் அளித்திருந்தனர்.

பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களையே எடுத்தனர். அவர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆளுக்கு 10 ரன்கள் எடுத்திருந்தால் கூட, அந்தப் போட்டியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். அதனால், அவர்களில் பேட்டிங்கில் மோசமாக இருக்கும் சிராஜுக்கு தனி பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா விளையாடப் போவதில்லை என்ற தகவல் உள்ளது. இந்த நிலையில்தான் முகமது சிராஜுக்கு தனியாக பேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் பேட்டிங் செய்ய நன்கு அறிந்தவர் தான்; எனவே அவருக்கு அடிப்படை பயிற்சிகள் எதுவும் அவசியம் இல்லை என்பதால், அவர் மற்ற வீரர்களுடன் சேர்ந்து பேட்டிங் பயிற்சி செய்தார். ஆனால், முகமது சிராஜுக்கு அடிப்படை பேட்டிங் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அவருடன் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடாக் நீண்ட நேரம் செலவிட்டார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். எனவே, அவர்கள் இருவரும் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட உள்ளனர்.
பும்ரா இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு அளிக்கப்பட உள்ளது. அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் எனவும் கூறப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட இருக்கிறார்.