மும்பை: டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஃபில்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். கடந்த சில போட்டிகளில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் இருந்தாலும், வீரர்கள் ஃபில்டிங் மேம்படுத்த தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய அணி மூன்று கேட்ச்களைக் கோட்டைவிட்டது. இதில் இரண்டு கேட்ச்களை அபிஷேக் சர்மா தவறவிட்டார். ஃபில்டிங்கில் உள்ள இந்தக் குறைபாடுகள், தொடரின் ஆரம்பத்திலிருந்தே அவ்வப்போது தலைதூக்கி வருவதாக மோர்கல் குறிப்பிட்டார்.

ஃபில்டிங் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், ஆனால் வியாழக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் எந்த தவறும் ஏற்படாமல் இருக்க தீவிரமாக உழைத்து வருவதாகவும் மோர்கல் தெரிவித்தார். நாக்-அவுட் சுற்றுகளில் ஒரு சிறிய தவறுக்கும் இடம் இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து பேசிய அவர், "யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். நாங்கள் பயிற்சி செய்வதில்லை என்பதல்ல; அதில் அதிக கவனம் செலுத்துகிறோம். சில சமயங்களில் இது மனநிலை சார்ந்தது. அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது. எங்களுக்கு, இதில் கடினமாக உழைப்பதே முக்கியம்," என்று மோர்கல் கூறினார்.
வீரர்கள் களத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்ட மோர்கல், "ஃபில்டிங் பற்றி நாங்கள் நிறைய பேசுகிறோம். சில சமயங்களில், 15-20 ரன்களை வீணடிக்கிறோம். இது ஒரு முக்கியமான அம்சம், இதில் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்கிறோம்," என்று விளக்கினார்.சூப்பர் 8 சுற்றுக்கு வந்த அனைத்து அணிகளையும் விட, இந்தியாவின் கேட்ச் பிடிக்கும் திறன் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மோசமான ஃபில்டிங்கிற்கு பிறகு இந்த எண்ணிக்கை 71.7% ஆக மேலும் குறைந்தது.

தொடரின் தொடக்கத்தில் வலுவான அணியாகக் கருதப்பட்ட இந்தியா, டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளுக்கு எதிராக இன்னும் ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், சூப்பர் 8 தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு,அணியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டது, பலனை தற்போது தந்துள்ளது. பவர் பிளேயில் இடது கை பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதால், சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குக் கொண்டுவரப்பட்டார். இந்த நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாகவும், அணியின் பேலன்சை மேம்படுத்தியிருப்பதால், இதே நிலை தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.