புனே: இந்திய அணியில் சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்று வீரராக ஆடியது குறித்து சர்ச்சை எழுந்து இருக்கும் நிலையில், அந்த முடிவை எடுத்ததே ஜவகல் ஸ்ரீநாத் தான் என இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறி இருக்கிறார். கம்பீர் தான் இந்த முடிவை எடுத்தார் என கூறப்பட்டு வந்த நிலையில் மோர்கல் இந்த விளக்கத்தை அளித்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியில் மூளை அதிர்ச்சிக்கான மாற்று வீரராக ஹர்ஷித் ராணா இடம் பிடித்திருந்தார். சிவம் துபே பேட்டிங் செய்தபோது அவரது ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் அவருக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டது.

அதனால் அவர் இந்திய அணி பவுலிங் செய்த போது அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இடம் பெற்றார். ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டருக்கு இணையான மாற்று வீரராக ஒரு வேகப் பந்துவீச்சாளர் ஆடுவது எப்படி சரியான தேர்வாக இருக்க முடியும்? என இங்கிலாந்து அணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேசி இருக்கிறார். மோர்கல் கூறுகையில் அனைத்து விஷயத்தையும் மேட்ச் ரெஃப்ரீ தான் முடிவு செய்தார் என ஒரே அடியாக மேட்ச் ரெஃப்ரீ ஜவஹல் ஸ்ரீநாத் வசம் இந்த விவகாரத்தை திருப்பிவிட்டு இருக்கிறார்.
இது பற்றி மோர்னே மோர்கல் பேசுகையில், "இன்னிங்ஸ் இடைவேளையின் போது சிவம் துபே ஆடுகளத்தில் இருந்து வந்தபோது தலைவலி இருப்பதாக கூறினார். நாங்கள் மேட்ச் ரெஃப்ரீக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று மாற்று வீரர் பெயரை பரிந்துரைத்து இருந்தோம். அங்கிருந்து மேட்ச் ரெஃப்ரீ (ஜவகல் ஸ்ரீநாத்) தான் அந்த முடிவை எடுத்தார்."
"அவர் முடிவை எடுத்தவுடன் ஹர்ஷித் ராணாவை அழைக்க சென்றோம். அவர் அப்போதுதான் இரவு உணவை உண்டு கொண்டிருந்தார். அவரை விரைவாக தயார் செய்து மைதானத்திற்கு அனுப்பினோம், இது எதுவும் எனது கட்டுப்பாட்டில் இல்லை. மேட்ச் ரெஃப்ரீ தான் இந்த முடிவை எடுத்தார். நாங்கள் பெயர்களை பரிந்துரை மட்டும்தான் செய்தோம். இது எதுவும் எங்கள் கைகளில் இல்லை." என்றார் மோர்கல்.