மும்பை: விராட் கோலியின் தாய் சரோஜ் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சகோதரர் விகாஸ் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி திடீரென விலகுவதாக அறிவித்தார்.

சொந்த பிரச்சனைகள் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி விலகுவதாக பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடைசியாக ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி விலகி இருந்தார். அப்போது அனுஷ்கா சர்மா கர்ப்பணியாக இருந்ததால், மகப்பேறுவுக்காக நாடு திரும்பினார்.
அதன்பின் 2021ல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது உடல்நிலை பிரச்சனை காரணமாக ஒரு போட்டியில் மட்டும் விளையாடவில்லை. இதனால் விராட் கோலியின் விலகலுக்கு அனுஷ்கா சர்மாவின் கர்ப்பமே காரணம் என்று கூறப்பட்டது. அதற்கேற்றபடி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது திடீரென பயிற்சி போட்டியில் இருந்து விலகி அனுஷ்கா சர்மாவை சந்திக்க லண்டன் சென்றிருந்தார் விராட் கோலி.
ஆனால் அண்மை காலங்களில் அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படங்களில் அவர் கர்ப்பமானதாக உறுதி செய்யப்படவில்லை. இதனால் விராட் கோலியின் விலகலுக்கு காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இந்த நிலையில் விராட் கோலியின் தாய் சரோஜ் உடல்நிலை மோசமாக இருந்ததன் காரணமாகவே விராட் கோலி குடும்பத்தினருடன் இருக்க காரணம் என்று சில தகவல் வெளியாகியது.
இதுகுறித்து விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், என் தாய் உடல்நிலை பற்றி பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. அவர் நல்ல உடல்நிலையுடன் ஃபிட்டாகவும், நலமாகவும் இருக்கிறார். அதனால் தாய் சரோஜின் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.