லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் ஒரு கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்தது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இந்த தொடரில் சிராஜ் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி அதிக விக்கெட் வீழ்த்தினாலும் ஒருவேளை இந்தியா தோல்வியை தழுவினால், இந்த கேட்ச் மிஸ் செய்ததை தான் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் சிராஜ் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றார். அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக இந்த தொடரில் அவர் விளங்குகிறார். தன் இதயத்தில் இருந்து அவர் செயல்படுகிறார். ஆனால் இது எல்லாம் ரசிகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆட்டத்தின் திருப்புமுனையே அது தான்:
அவர் விட்ட கேட்ச் மட்டும்தான் நினைவில் இருக்கும். இதுதான் போட்டியின் சாரம்சம். சிராஜ் விட்ட கேட்ச் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறி இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன். தற்போது புரூக் களத்தில் நின்றிருந்தால் இங்கிலாந்து கவலை கொள்ளவே தேவையில்லை.
ஐந்தாவது நாளில் சிராஜ் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்காக வாய்ப்பு இருக்கிறதா? அவரால் முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோன்று ஹாரி புரூக் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடித்திருக்கின்றது. ஜோ ரூட், ஜோ ரூட் போலவே தான் விளையாடினார்.
ஜோ ரூட், ஹாரி புரூக்கிற்கு பாராட்டு:
அவர் கோபத்தில் எந்த ஷாட்டையும் ஆடவில்லை. ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் களத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். இது இங்கிலாந்து அணியின் பேட்டிங்கிற்கு நல்ல பலமாகும். நிச்சயம் ஹாரி புரூக் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார். அவருடைய பேட்டிங் பலம் குறைய வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன் என்று நாசர் உசைன் தெரிவித்துள்ளார்.