லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி முதலில் பந்துவீசியது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அனைவரையும் தன் பந்துவீச்சால் ஆச்சரியப்படுத்தினார். இதன் பின்னணியில் தான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார்.

முதல் நாள் ஆட்டத்தின் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்திய கேப்டன் சுப்மன் கில், நிதிஷ் ரெட்டியை பந்துவீச அழைத்தார். தனது முதல் ஓவரிலேயே, இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, இந்திய அணிக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை வழங்கினார் நிதிஷ் குமார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட, நிதிஷ் குமார் ரெட்டியின் பந்துவீச்சு பிட்ச்சில் அதிக ஸ்விங் ஆனது.
முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு பேசிய ரெட்டி, தனது பந்துவீச்சு முன்னேற்றத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய கேப்டனுமான பாட் கம்மின்ஸ் மற்றும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
"ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு, எனது பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். எனது கேப்டன் பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பது குறித்து சில மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினார். அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது," என்று ரெட்டி கூறினார்.
பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் குறித்து பேசுகையில், "மோர்கலுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக எனது பந்துவீச்சின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி வருகிறோம், அதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது," என்றார்.
கடின உழைப்புடன், தன்னம்பிக்கை கொள்வது வெற்றிக்கான முக்கிய திறவுகோல் என்பதை இப்போது உணர்வதாகவும் அவர் மேலும் கூறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.