கொல்கத்தா: பிசிசிஐ தனது புதிய கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்தே அமல்படுத்த தொடங்கி விட்டது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 22 அன்று துவங்க உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் வலைப் பயிற்சி செய்து வருகின்றனர். முதல் நாள் வலைப் பயிற்சியின் போது அனைத்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் இரண்டு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

இதற்கு முன் சில வீரர்கள் தாமதமாக தங்கள் காரில் மைதானத்திற்கு வருவது உண்டு. தற்போது விதிக்கப்பட்டிருக்கும் புதிய பிசிசிஐ கட்டுப்பாடுகளால் இனி எந்த வீரரும் தாமதமாக செல்ல முடியாது. ஒருவேளை ஏதேனும் ஒரு வீரர் பேருந்து புறப்படும் முன் வரவில்லை என்றால் அவர் ஹோட்டல் அறையிலேயே தான் தங்க வேண்டும்.
இந்த அழுத்தத்தால் பெங்கால் கிரிக்கெட் அமைப்பு ஏற்பாடு செய்து இருந்த இரண்டு பேருந்துகளில் அனைத்து இந்திய டி20 அணி வீரர்களும் ஒன்றாகவே வலை பயிற்சிக்கு சென்றனர். வலைப் பயிற்சியில் சில வீரர்கள் தங்களின் பயிற்சியை முடித்து விட்டாலும் கூட மற்ற வீரர்களும் பயிற்சியை முடிக்கும் வரை காத்திருந்தனர்.
அனைவரும் ஒன்றாகவே பயணம் செய்ய வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தி இருப்பதால் அனைவரும் காத்திருந்து பின் ஒன்றாகவே தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பினர். சில நாட்களுக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிக்கப்பட்ட போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா இந்த கட்டுப்பாடு குறித்த அறிக்கை பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியாகவில்லை என்று கூறி இருந்தார்.
மேலும், அப்படி அதிகாரப்பூர்வமாக வெளியானால் அப்போது இது பற்றி பேசிக் கொள்ளலாம் என்று கூறி இருந்தார். அதாவது இந்த விதிகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பது போல அவர் பேசி இருந்தார். ஆனால், தற்போது பிசிசிஐ-யின் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது.