லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இங்கிலாந்துக்கு முன்பே சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோகித் சர்மா,கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணியின் பேட்டிங்கில் அனுபவம் இல்லாத வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் விராட் கோலி இடத்தில் யார் களமிறங்குவார் என்பது தான் தற்போது கேள்வியாக இருந்துள்ளது.

இதில் பலரும் சுப்மன் கில், கருண் நாயரை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் புது யோசனையை வழங்கி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், கோலி இல்லாத நிலையில் தற்போது ராகுலின் இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கின்றது.
ராகுலை நான் நம்பர் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரராக தான் பார்க்கின்றேன். பலரும் ராகுலுக்கு பல விதமான பேட்டிங் நம்பரை தருகிறார்கள். ஆனால் விராட் கோலியின் இடம் தான் ராகுலுக்கு சரியான மாற்று இடமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். ராகுலால் இரட்டைப் பணியை செய்ய முடியும்.
உதாரணத்திற்கு ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தால் கூட அவர் நம்பர் நான்காவது வீரராக களம் இறங்கி அணியின் இன்னிங்சை கட்டமைப்பார். ஏனென்றால் அவருக்கு சரியான பேட்டிங் எப்படி இருக்கின்றது. இங்கிலாந்து மண்ணில் அவர் ஏற்கனவே நன்றாக விளையாடி இருக்கின்றார் என்று சபா கரீம் பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 116 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 51 ரன்களும் ராகுல் எடுத்து இருந்தார். அது மட்டுமில்லாமல் ராகுல் இங்கிலாந்து மண்ணில் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 614 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதமும் அடங்கும். ராகுலின் சராசரி 34 என்று அளவில் இருக்கிறது. இதனால் ராகுலை நம்பர் நான்காவது வீரராக களம் இறக்க வேண்டும் என்று சபா கரீம் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இருக்கும் அணியில் ராகுலுக்கு தொடக்கம் இடம் தான் கிடைத்திருக்கிறது.