கட்டாக்: இந்திய ஒருநாள் அணியில் கே.எல். ராகுலின் பேட்டிங் வரிசை குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் சில பிடிவாதமான விஷயங்களை கடைப்பிடித்து வருகிறார். பேட்டிங் வரிசையில் எப்போதும் இடது கை-வலது கை பேட்ஸ்மேன்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.
ஆனால் முதல் மூன்று பேட்டிங் வரிசையில் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

தற்போதைய அணியில் இடம் பெற்று இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்று பார்த்தால் அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே. ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் நிரந்தரமாக இடம் அளிக்கப்படவில்லை. அவர்கள் மாற்று வீரர்களாக மட்டுமே உள்ளனர்.
ஆனாலும், இடது கை-வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என நினைத்து கௌதம் கம்பீர் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து இருக்கிறார். அதனால் நான்காம் வரிசையில் வலது கை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயரையும், ஐந்தாம் வரிசையில் இடது கை பேட்ஸ்மேனான அக்சர் பட்டேலையும், ஆறாம் வரிசையில் வலது கை பேட்ஸ்மேனான கே.எல். ராகுலையும் களமிறக்கி வருகிறார்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இதுதான் நடந்தது. அக்சர் பட்டேலும் ஐந்தாம் வரிசையில் இறங்கி சிறப்பாகவே ரன் குவித்து இருக்கிறார். ஒரு அரை சதத்தையும் அடித்து இருக்கிறார். ஆனால் ஆறாம் வரிசையில் இறங்கும் ராகுலால் ரன் குவிக்க முடியவில்லை. முதல் போட்டியில் 2 ரன்கள், இரண்டாவது போட்டியில் 10 ரன்கள் மட்டும் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுலை மிடில் ஆர்டருக்குத் தள்ளியதோடு இப்போது பின்வரிசைக்கும் தள்ளி இருப்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரரான தோதா கணேஷ் இதை முட்டாள்தனம் என விமர்சித்து இருக்கிறார். இது பற்றி அவர் ட்விட்டர் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
"இரண்டாவது போட்டியிலும் கே.எல். ராகுல் அதே இடத்தில் (ஆறாம் வரிசையில்) பேட்டிங் செய்து இருக்கிறார். அதை பார்த்து நான் வாயடைத்து போய் இருக்கிறேன். ஒரு முழு நேர பேட்ஸ்மேனான ராகுல் ஆறாம் வரிசையில் இறங்குவது அறிவார்ந்த விஷயமாக இருக்கிறதா? ஒருவேளை இந்திய அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விட்டால் அப்போதும் அக்சர் பட்டேலை ஐந்தாம் வரிசையில் அனுப்பும் தைரியம் உங்களுக்கு இருக்குமா? அப்படி இல்லை என்றால் இந்த பரிசோதனை எந்த வகையில் அறிவார்ந்ததாக இருக்கிறது? இது முற்றிலும் முட்டாள்தனம்" என்று கூறி இருக்கிறார்.
அவரது விமர்சனத்தை மேலும் பல முன்னாள் வீரர்களும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. கே.எல். ராகுலை ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய வைக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. அதே சமயம் அக்சர் பட்டேல் ஐந்தாம் வரிசையில் ரன் குவித்து வருவதும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.