நாக்பூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இந்த தகவலை உறுதி செய்தார். வருண் சக்கரவர்த்தி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய அணியினருடன் இணைந்து இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ளது. டி20 தொடர் முடிந்த உடன் நாக்பூர் சென்ற வருண் சக்கரவர்த்தி அங்கு ஒருநாள் அணி வீரர்களுடன் பயிற்சி செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் சேர்க்கும் முன் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். எனவே, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியை ஆட வைத்து பரிசோதனை செய்து, அவரை சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் டி20 அணியில் விக்கெட் வேட்டையாடி வருகிறார். 2024 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டதை எடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார். அப்போது முதல் இதுவரை 10 டி20 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். உச்சகட்டமான ஃபார்மில் இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் அனைத்தும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளன. ஆண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைக்கும் என்பதால் வருண் சக்கரவர்த்தியை அங்கு அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அதே சமயம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான உத்தேச அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே, ஐந்தாவதாக வருண் சக்கரவர்த்தியை சேர்க்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவரை சேர்க்க வேண்டும் என்றால் வேறு ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.