லண்டன்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லார்ட்ஸ் மைதானத்தின் மெதுவான ஆடுகளத்திற்கு ஏற்ப, தங்களின் வழக்கமான அதிரடி ஆட்டத்தை விடுத்து, பொறுமையாக விளையாடி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது.
ஜோ ரூட் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார். முன்னதாக, அவரும் ஒல்லி போப்பும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த போப், 44 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் சில காலமாக பெரிதாக ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார். அது குறித்து புஜாரா பேசி இருக்கிறார்.

இந்நிலையில், ஒல்லி போப்பின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் அனுபவ வீரர் செதேஷ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பெரிய சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதால் போப் தன் மீது ஏமாற்றம் அடைந்திருப்பார் என்று புஜாரா கூறினார்.
"இந்த ஆடுகளத்தில் போப் ஒரு பெரிய சதம் அடித்திருக்க முடியும். அவர் ஒரு தரமான வீரர். அவர் நிலைத்து நின்றுவிட்டால், யாராலும் அவரைத் தடுக்க முடியாது," என்று புஜாரா பாராட்டினார். அதே சமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் போப் மேம்படுத்த வேண்டிய ஒரு முக்கிய பகுதியையும் புஜாரா சுட்டிக்காட்டினார்.
"அவர் ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று பதற்றத்துடன் காணப்படுகிறார். முதல் 45 நிமிடங்கள் அவர் மிகவும் கவனமாக பேட்டிங் செய்ய வேண்டும். அதன்பிறகு தனது வழக்கமான ஷாட்களை ஆடத் தொடங்கலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் சீராக விளையாடி, இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு தொடர்ந்து பங்களிக்க வேண்டும்," என்று புஜாரா தனது ஆலோசனையை வழங்கினார்.
இந்தப் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் பெரிதாக ரன் குவிக்காமல் இந்திய அணி தடுக்க வேண்டும். ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.