லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், மைதானத்தின் தலைமைப் பராமரிப்பாளர் லீ ஃபோர்டிஸுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய அணியினர் பிட்ச் அருகே சென்ற போது பராமரிப்பாளர் எச்சரிக்கும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.
இதே லீ ஃபோர்டிஸ் பிரென்டன் மெக்குல்லம் உடன் செய்த சம்பவம் ஒன்று அவரது இரட்டை வேடத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. என்ன நடந்தது? மெக்குல்லத்துக்கு ஒரு நியாயம், கம்பீருக்கு ஒரு நியாயம் என லீ ஃபோர்டிஸ் நடந்து கொண்ட விதம் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

செவ்வாயன்று இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஆடுகளத்தை ஆய்வு செய்யச் சென்ற இந்தியப் பயிற்சியாளர் குழுவினரை, ஆடுகளத்திலிருந்து 2.5 மீட்டர் தள்ளி நிற்குமாறு ஃபோர்டிஸ் கூறியுள்ளார். சாதாரண காலணிகளுடன் ஆடுகளத்தைப் பார்வையிட்ட தங்களை இவ்வாறு நடத்தியது ஆச்சரியத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதார்ன்ஷு கோடக் தெரிவித்தார்.
இந்த விவகாரம் முற்றுவதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் சுமார் 10 கிலோ எடையுள்ள குளிர்பானப் பெட்டியை மைதானத்தின் முக்கிய பகுதிக்கு அருகே கொண்டு சென்றபோது, ஃபோர்டிஸ் அவரைப் பார்த்து கத்தியதாகக் கூறப்படுகிறது. தனது அணி ஊழியரிடம் கடுமையாகப் பேசியதால் கோபமடைந்த கம்பீர், ஃபோர்டிஸிடம் நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீங்கள் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை, உங்களுக்கு அந்த உரிமை இல்லை. நீங்கள் ஒரு மைதான பராமரிப்பாளர், அதற்கு மேல் ஒன்றுமில்லை," என்று கம்பீர் ஆவேசமாக கூறினார்.
இந்த வாக்குவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டதாகவும் இந்திய தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒரு நாள் முன்னதாக, இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ராப் கீ ஆகியோர் ஆடுகளத்தை ஆய்வு செய்தபோது, ஃபோர்டிஸ் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என கோடக் சுட்டிக்காட்டினார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கோடக், "மைதான பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவது இயல்புதான், ஆனால் அதற்காகத் திமிராக நடந்துகொள்ளக் கூடாது. இது ஒன்றும் தொட்டால் உடைந்துவிடும் பழங்காலப் பொருள் அல்ல," என்று கூறினார். மேலும், ஓவல் மைதான பராமரிப்பாளருடன் பணியாற்றுவது எளிதானது அல்ல என்று சில வீரர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய அணி சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், ஓவல் மைதானத்தை நிர்வகிக்கும் சர்ரே கிரிக்கெட் கிளப்பும் இதுகுறித்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த வாக்குவாதம், தொடரின் கடைசிப் போட்டிக்கு முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.