லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் இரண்டுக்கு இரண்டு என்று கணக்கில் சமன் செய்தது.
ஐந்தாவது நாள் தொடங்கிய போது இந்திய அணிக்கு புதிய பந்து கிடைக்க வெறும் நான்கு ஓவர்கள் தான் இருந்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் புதிய பந்தை இந்திய அணி எடுக்கும் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் நினைத்தனர்.

ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் பழைய பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் புதிய பந்தை தேர்வு செய்யாமல் இந்திய வீரர்கள் பழைய பந்தை வைத்து செயல்பட்டார்கள். இதில் நான்கு விக்கெட்டுகளையும் இந்திய அணி வீழ்த்தி போட்டியை வென்றது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது பேசும்போது இந்திய அணியின் வெற்றியை குறை கூறினார்.
இந்தியா வெற்றி பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாத தன்வீர் அகமது போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பந்து குறித்து விமர்சனம் எழுப்பினார். இது குறித்து பேசிய அவர், சிராஜ் பயன்படுத்திய பந்து மிகவும் பழையது. ஆனால் அது அப்படி செயல்படவில்லை.
பந்து நன்றாக ஸ்விங் ஆனது. பந்தின் தன்மையை இந்திய வீரர்கள் மாற்றினார்களா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆரம்ப கட்டத்தில் சிராஜ் டெஸ்ட் போட்டிக்கு சரி பட்டு வரமாட்டார் என்று நினைத்தேன். ஆனால் இங்கிலாந்து மண்ணில் அவர் நன்றாகவே விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.
தன்வீர் அகமத் இந்தியா குறித்து இப்படி பேசுவது, இது முதல் முறை அல்ல. ஏற்கனவே சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்ற போது சமூக வலைத்தளத்தில் இந்தியா ஏமாற்றி வென்றது என்று அவர் கூறி சர்ச்சையில் சிக்கினார் இதேபோன்று டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பந்தை நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் செய்த போது இதே போல் ஒரு குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தன்வீர் அஹ்மதின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.