டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தும் நிலையில் இதில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து இங்கிலாந்து ஜாம்பவான் காலிங்வுட் கணித்திருக்கிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா படுதோல்வியை தழுவியது. இந்த நிலையில் மீண்டும் இரு அணிகளும் மோதுவதால் இந்தியா பழித்தீர்க்குமா என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்வுட், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இம்முறை இந்தியா தோற்பது போல் எனக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஏதேனும் பிரமிக்கத்தக்க வகையில் நடந்தால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும்.
கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை இந்திய அணியில் எந்த ஒரு குறையும் இல்லை. அனைத்திற்கும் சரியான வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். இதே போன்று பும்ராவின் ஃபார்முக்கு எந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள். திறமையாக செயல்படும் பும்ரா வேகமாகவும் துல்லியமாகவும் பந்து வீசுகிறார். பும்ராவின் பந்துக்கு எந்த பேட்ஸ்மேனாலும் பதில் கூற முடியாது.
120 பந்துகள் கொண்ட இந்த போட்டியில் பும்ராவின் 24 பந்து மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். இந்தியா இந்த தொடரில் நெருக்கடியான கட்டத்தில் கூட நம்பிக்கையுடன் காணப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரம்மாண்டமான ஒரு இன்னிங்ஸை ரோகித் சர்மா, ஆடியதன் மூலம் அவர் நல்ல பார்மில் இருக்கின்றார்.
இரண்டு அணிகளுமே அதிரடியாக ஆடும் பழக்கத்தை உடையவை. இந்த சூழலில் கயானா ஆடுகளும் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு எந்த பயனும் இல்லை என்றால் இங்கிலாந்து அணிக்கு சாதகமான சூழல் ஏற்படும். அதே சமயம் ஆடுகளம் தோய்வாக இருந்தது என்றால் இந்தியாவுக்கு போட்டி சாதகமாக மாறும்.
கடந்த உலக கோப்பையில் எல்லாம் முதல் 10 ஓவர்களில் இந்தியா மெதுவாக விளையாடியது. இப்படி ஒரு யுக்திகளை மேற்கொண்டால் நிச்சயம் நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட இந்திய அணி தற்போது அதிரடியாக ஆடுகிறார்கள். இப்படி ஒரு திட்டத்தை இந்தியா கையாள்வதன் மூலம் தோற்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் மற்ற அணிகளை காட்டிலும் நீங்கள் ஒரு படி முன்னேறி இருக்க வேண்டும். அதனை இந்தியா தற்போது சிறப்பாக செய்கிறது என்று காலிங்வுட் பாராட்டியுள்ளார்.