ராஞ்சி : டெஸ்ட் போட்டியில் ஒரு அணியாக வெற்றி பெறும் மகிழ்ச்சிக்கு முன் சொந்த சாதனைகள் அந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இன்னும் 152 ரன்கள் மட்டுமே இந்திய அணிக்கு தேவையாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. பின்னர் 2வது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் சுழலை சமாளிக்க முடியாமல் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.

இதனால் இந்திய அணி வெற்றிபெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் களமிறங்கிய ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்தார். 35வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய போது அஸ்வின் மற்றும் ஜடேஜா நீங்கள் இருவரும் தான் தொடங்க போகிறீர்கள். யார் முதல் ஓவரை வீச விரும்புகிறீர்கள் என்று எங்களிடம் கேட்டார்.
அப்போது நான் கைகளை உயர்த்தினேன். எப்போதும் புதிய பந்தில் பவுலிங் செய்வது உற்சாகமளிக்கும். ஏனென்றால் கொஞ்சம் கூடுதல் வேகத்தில் பந்து செல்லும். அதேபோல் முதல் இன்னிங்ஸில் எனது பவுலிங் எடுபடவில்லை. நான் வீசிய பந்துகளில் பெரியளவில் எந்த டர்னும் ஏற்படவில்லை. அதனால் எனது பவுலிங்கை மீண்டும் சோதனை செய்தேன். இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் விளையாடும் போது, கொஞ்சம் பிட்ச் எதிர்பார்த்ததை போல் இருக்காது. அதேபோல் பவுன்ஸ்-ம் பெரியளவில் கிடைக்கவில்லை.
அதனால் சைட் ஸ்பின் அதிகமாக வீச வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனது முதல் ஸ்பெல்லில் பந்தை பிட்சில் அதிகமாக மோத செய்தேன். அதேபோல் மறுபக்கம் ஓரளவிற்கு ஸ்பின் செய்ய முடிந்தது. அதனால் மனதளவில் கொஞ்சம் பவுலிங்கில் மாற்றமடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் கேரம் பால் வீசுவதற்கு எனது கால்கள் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும். அதேபோல் கேரம் பால் மிஸ்ஸானால், அதிக ரன்கள் செல்லும். ஒரு ரன்னை கூட போனஸாக இங்கிலாந்து அணிக்கு கொடுக்க விரும்பவில்லை.
குல்தீப் யாதவ் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார். அவரிடம் பிடித்தது என்னவென்றால், அவரின் ரன் அப்பில் பணியாற்றி வருகிறார். வேகத்தில் இருந்து, ஸ்பின் வரை எல்லாவற்றிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் வேகத்தை வைத்து விளையாடுவதையும் தொடங்கியுள்ளார். அதனால் அவரின் பலம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அவர் விரைவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார். அதேபோல் 2ஆம் நாளில் குல்தீப் யாதவ் கொஞ்சம் விரைவாகவே பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார்.
அவரின் டிஃபென்ஸ் மிகச்சிறப்பாக உள்ளது. அவர் பேட்டிங் செய்யும் போது ஓய்வறையிலும் அமைதியான சூழல் உள்ளது. அதேபோல் துருவ் ஜுரெல் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். 2வது டெஸ்டில் விளையாடும் இளம் வீரர் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், தடுப்பாட்டத்தை நம்பிக்கையுடன் விளையாடினார். எந்த பவுலரை அட்டாக் செய்ய வேண்டும், எப்படி டெய்லெண்டர்களுடன் விளையாட வேண்டும் என்று நன்றாக உணர்ந்துள்ளார். கிட்டத்தட்ட உணவு இடைவேளை வரை விளையாடினார்.
70 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஆட்டத்தை எங்களிடம் அளித்தாலே போதும் என்று நினைத்திருந்தோம். எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அணியாக வெற்றிபெறுவதில் தான் அதிக மகிழ்ச்சி உள்ளது. அதிலும் 4 நாட்கள் போராடி அடையும் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி இன்னும் கூடுதலானது. அந்த மகிழ்ச்சி நாளை கிடைக்கும் என்று நம்புகிறேன். ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். தற்போது சாதனைகள், பெருமைகள் என்று எல்லாவற்றையும் கடந்து ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து விளையாட தொடங்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.