பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரு ஓவரால் ஆட்டத்தின் போக்கே ஒட்டுமொத்தமாக மாறியது. அந்த மோசமான ஓவரில் இருந்து ஆட்டம் இந்தியாவின் கைகளில் இருந்து இங்கிலாந்து அணியின் கைகளுக்குச் சென்றது.
அதுவரை ஒருநாள் போட்டி போல, சுமார் 80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வந்த இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித், பிரசித் கிருஷ்ணா வீசிய 32வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் சேர்த்து டி20 போட்டி போல ஆடத் துவங்கினார். அந்த ஓவருக்குப் பிறகு ஆட்டம் அப்படியே இங்கிலாந்து அணிகளின் கைகளுக்குச் சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் காலையில் 84 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. எப்படியும் அந்த அணி சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்துவிடும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஹாரி ப்ரூக் மற்றும் ஏழாம் வரிசையில் இறங்கிய ஜேமி ஸ்மித் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.
31வது ஓவரின் முடிவில் ஜேமி ஸ்மித் 32 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். ஹாரி ப்ரூக் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார். 32வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி இறைத்தார். அந்த ஓவரில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் விட்டுக் கொடுத்தார். மேலும் ஒரு வைடு வீசினார். மொத்தமாக 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அந்த 5 பவுண்டரிகளையும் அடித்த ஜேமி ஸ்மித் அந்த ஓவரின் முடிவில் 38 பந்துகளுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தார்.
அந்த ஓவருக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஒவ்வொரு ஓவரிலும் அதிரடியாக ரன் குவிக்க முயன்றது. சில ஓவர்களில் பத்துக்கும் அதிகமாக ரன் சேர்த்தது. இதை அடுத்து ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் சதம் அடித்தார். ஹாரி ப்ரூக்கும் சதம் அடித்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள்.
முதலில் ஒரு ஓவருக்கு நான்கு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்த்த இங்கிலாந்து அணி, 60வது ஓவரை எட்டியபோது ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற விகிதத்தில் ரன் சேர்க்கத் தொடங்கியிருந்தது. அதனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆர்வமின்றி சோர்ந்து காணப்பட்டனர். இங்கிலாந்து அணி எளிதாகவே 300 ரன்கள் தாண்டியது. இந்த ஒரு ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அமைத்தது என்பதில் சந்தேகமில்லை.