மும்பை: புஜாரா, இந்திய அணியில் இருந்தபோது மிகவும் சிறந்த வீரராக இருந்தவர், ஆசிய மைதானங்கள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, நாடுகளிலும் ரன்கள் குவித்தவர். இந்த நிலையில் புஜாரா, சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை வீரர்கள் அணுகும் மாற்றம் குறித்து பேசியுள்ளார்.
உதாரணமாக, இங்கிலாந்து அணி 'பாஸ்பால்' எனும் ஸ்டைலை பின்பற்றுகிறது. இது பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட் உடன் வேகமாக ரன்களை அடிக்கும் அணுகுமுறையை கொண்டது. ஆனால் இது இங்கிலாந்துக்கு சாதகத்தை கொடுத்தாலும், பெருமளவு பாதகத்தை தான் தந்துள்ளது.

இது குறித்து பேசியுள்ள புஜாரா, பேட்ஸ்மேன்கள் பந்து வீச்சு மைதானத்தின் நிலை மற்றும் ஒட்டுமொத்த சூழ்நிலைகளைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெறுமனே பந்தை அடிப்பதற்கு மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றும் கூறினார். டெஸ்ட் கிரிக்கெட் என்பது விளையாட்டின் மிக நீண்ட வடிவம், இதில் 'பொறுமை' மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
"ஆக்ரோஷமான கிரிக்கெட் மட்டுமே டெஸ்ட் போட்டிகளை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல. டெஸ்ட் போட்டிகளில் வெற்றியின் உண்மையான திறவுகோல், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதுதான். எப்போதும் மெதுவாக விளையாட வேண்டும் என்று அர்த்தமல்ல. சில சமயங்களில், மைதானம் சாதகமாக இருக்கும்போது 80 அல்லது 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்கலாம்.
ஆனால், சூழ்நிலைகள் கடினமாகவும், பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும்போதும், அதை மதிக்க வேண்டும்,"
தேவைப்படும்போது அழுத்தத்தை உள்வாங்கி, சரியான தருணத்தில் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக SENA நாடுகளில், புதிய பந்து மிகவும் சவாலானதாக இருக்கும். ஆட்டத்தைப் புரிந்து கொள்வது எல்லாமே," என்று புஜாரா மேலும் கூறினார்.
இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்தது. சுப்மன் கில்லை புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பந்தை துணைக் கேப்டனாகவும் அறிவித்தனர். தேர்வுக்குழு, கருண் நாயர் மற்றும் ஷர்துல் தாக்கூரையும் அணியில் சேர்த்து, இளம் வீரர்களுக்கு வழிகாட்ட அவர்களின் அனுபவத்தைப் பயன்படுத்த வாய்ப்பு அளித்துள்ளது.
இது குறித்து தனது கருத்தை பதிவு செய்த புஜாரா, கில் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனக்கு என்ன தேவை என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர். அவர் மிகவும் அமைதியானவர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர். ஐபிஎல்-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை அவர் வழிநடத்திய விதத்தை நான் பார்த்திருக்கிறேன், எனவே அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்," என்று புஜாரா
தெரிவித்தார். சீனியர் வீரர்கள் கோலி, ரோகித் ஓய்வு பெற்ற நிலையில், புஜாரா, ரனே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பை தராமல் இளம் வீரர்களை வைத்து இந்திய அணி இங்கிலாந்து தொடரை சந்திக்கிறது.
இங்கிலாந்து பயணத்திற்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.