மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரில் கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்தில் கேப்டனாக அபாரமாக செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு வழி நடத்தி இருக்கிறார்.
ஆனால் சூரியகுமார் யாதவ் பேட்ஸ்மேனாக கடுமையாக தடுமாறி இருக்கிறார். இந்த தொடரில் அவர் மொத்தமாகவே 28 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். இதில் இரண்டு டக்அவுட் அடங்கும். 0, 12,14,0,2 ஆகிய ரன்களை தான் சூரியகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அடித்து இருக்கிறார்.

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கூட சூரியகுமார் யாதவ் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஒரே மாதிரி பெரிய சாட் அடித்து ஆட்டம் இழந்து வருகிறார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், "சூரியகுமார் யாதவ் கேப்டனாக இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.ஆனால் அவரிடம் இருக்கும் பிரச்சனையே தற்போது பேட்டிங் தான்".
"அவருடைய கேப்டன்ஷியில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனால் சூரியகுமார் பேட்டிங்கில் எடுத்த உடனே அதிரடியாக ஆடுகிறேன் என்ற பெயரில் ஆட்டம் இழந்து வருகிறார். அவர் கொஞ்சம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ரன்களை சேர்க்க பார்க்க வேண்டும். சஞ்சு சாம்சனும் சூரியகுமார் யாதவும் ஒரே பந்தில் ஒரே மாதிரி ஒரே பில்டிங் செட்டப்பில் ஒரே ஷாட் ஆடி ஒரே தவறு செய்கிறார்கள்".
"இது ஒரு முறை நடந்தால் பரவாயில்லை. ஆனால் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் நடந்து விட்டது. இதை அப்படியே விட்டு விட முடியாது. வீரர்கள் சுதந்திரத்துடன் விளையாட வேண்டும். ஆனால் அதே சமயம் ஒரே மாதிரி ஆட்டம் இழக்கக்கூடாது. நம்முடைய பேட்ஸ்மேன் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் விளையாட வேண்டும்".
"சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். டி20 கிரிக்கெட் தற்போது முழுமையாக மாறியதற்கு சூரிய குமார் யாதவ் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். ஆனால் சூரியகுமார் தற்போது தன்னுடைய பேட்டிங்கில் அணுகுமுறையை மாற்ற வேண்டும்" என்று அஸ்வின் கூறியுள்ளார். இதேபோன்று அபிஷேக் ஷர்மா அவ்வளவு அழகாக ஷாட்களை ஆடி வருவதாகவும் அவர் மீதான கண்களை விலகவே முடியாது என்றும் கூறியுள்ளார். இதை போல் இந்த டி20 அணியில் ஜெய்ஸ்வாலுக்கும் ஒரு இடம் இருப்பதாகவும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.