லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்ய ஆடுகள பராமரிப்பாளருடன் ஏற்பட்ட மோதல் இந்திய வீரர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று தமிழக கரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஐந்தாவது டெஸ்டில் நடத்தவிருக்கும் லண்டன் ஓவல் மைதானத்தின் பிட்ச்சில் இருந்து விலகி இருக்குமாறு கள பராமரிப்பாளர் ஃபோர்டிஸ் கேட்டுக்கொண்டார்.
இது கம்பீருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஃபோர்டிசை கடுமையாக அவர் சாடினார். இந்த நிலையில், இந்திய அணியினரை அனுமதிக்காத கள பராமரிப்பாளர் , இங்கிலாந்து குழுவினரை மட்டும் அனுமதித்து இருக்கிறார். இதனை சுட்டிக்காட்டியுள்ள அஸ்வின், கடந்த காலங்களில் இதுபோன்ற மோதல்கள், இந்திய அணியின் மிகவும் ஆக்ரோஷமான பக்கத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அஸ்வின், "இதையெல்லாம் பார்த்த பிறகு, நான் நினைத்தேன். 'பாஸ், நீங்கள் என்ன செய்கிறீர்கள்?' இப்படி இந்திய அணிக்கு எதிராக விளையாடக் கூடாது. இந்திய அணியை யாராவது வம்பிழுத்தால், பதிலடி தர யாராவது ஒருவர் எழுந்து நிற்பார்."
"விஷயங்கள் சரியாக நடக்காதபோது, அல்லது நாங்கள் சுவருக்கு எதிராக தள்ளப்படும்போது, இந்திய அணி ஒரு வித்தியாசமான மிருகமாக மாறிவிடும். இந்த குறிப்பிட்ட சம்பவம், இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது, இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நன்மையாக இருக்கும் என்று நினைக்கிறேன்."
"இங்கிலாந்து நன்றாக விளையாடி, இந்தியா தோல்வியடைந்தால் இது ஒரு பொருட்டாக இருக்காது, ஆனால் எப்படியோ எனக்கு இது இந்தியாவை தூண்டப்பட வேண்டிய வழி இல்லை என்று தோன்றுகிறது. " என்று அஸ்வின் கூறினார்.மங்கி கேட் சம்பவம் நடந்தபோது, அடுத்த டெஸ்டில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்று உலகிற்கு தெரியும் என்று அஸ்வின் குறிப்பிட்டார்.
"இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும்போது, அந்த உறங்கும் மிருகங்கள், தனிப்பட்ட முறையில் பிரகாசிக்கும். வீரர்கள், ஒன்றிணைவார்கள். இதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். எந்தவொரு மோதலுக்கு பிறகும் பாருங்கள். மங்கி கேட் சம்பவம் நடந்தபோது, அடுத்த டெஸ்டில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதைப் பார்த்தீர்கள். காபாவில் என்ன நடந்தது, லார்ட்ஸில் விராட் '60 ஓவர்கள் நரகம்' என்று கூறியதைப் பாருங்கள். இது அணியை ஒருங்கிணைக்கிறது," என்று அஸ்வின் கூறினார்.