லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் 374 ரன்கள் என்ற இலக்கை கடைசி இன்னிங்சில் இங்கிலாந்து அணி தொடங்கியது.
கடைசி இன்னிங்சில் அந்த மைதானத்தில் வெற்றிகரமாக அடிக்கப்பட்ட ஸ்கோரே 265 ரன்கள் தான்.இதனால் இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் ஜோடி சேர்ந்து 195 ரன்கள் சேர்த்தனர்.

அது மட்டும் அல்லாமல் இருவரும் சதம் அடித்தனர். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், ஜோ ரூட் விளையாடிய போது அதிக அளவு சுழற் பந்துவீச்சை பயன்படுத்தாதது இந்திய அணிக்கு பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
பின்தங்கி இருப்பதற்கான காரணம் இது தான்:
இது குறித்து பேசிய அவர், "இந்திய வீரர்களிடம் போதிய அளவு போட்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லை. இந்த தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு பயன்படுத்தவில்லை. இதன் காரணமாகத்தான் இந்த தொடரில் நாம் பின்தங்கி இருக்கின்றோம். இங்கிலாந்து முன்னிலையில் இருக்கின்றது."
"களத்தில் நாம் சரியான முடிவுகளை எடுத்து இருக்க வேண்டும். கில் வரும் காலங்களில் சிறந்த கேப்டனாக வருவார். தவறிலிருந்து பாடும் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன். ஐந்தாவது டெஸ்டில் இது போன்ற சூழ்நிலைகளில் சுழற் பந்துவீச்சாளர்களை கண்டிப்பாக பயன்படுத்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை இந்தியா மிஸ் செய்து விட்டது என நினைக்கின்றேன்."
வாசிங்டன் சுந்தரை முன்பே பயன்படுத்திருக்கனும்:
"இப்படி நீங்கள் சுழற் பந்துவீச்சாளரை பயன்படுத்தாமல் போனால் வெறும் தற்காப்புக்கு மட்டும்தான் அவர்கள் இருப்பார்கள், தவிர விக்கெட் எடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படாது. ஹாரி புரூக் 20 ரன்கள் கடந்த பிறகு ஒரு முனையில் சுழற் பந்துவீச்சாளர், மறுமுனையில் வேகப்பந்துவீச்சாளரையும் பயன்படுத்தி ரன்களை கட்டுப்படுத்திருக்க வேண்டும். குறிப்பாக வாஷிங்டன் சுந்தரை மிக விரைவாக பந்து வீச அழைத்திருக்க வேண்டும். இந்த தவறு எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்."
"இந்த அறிவுரைகளை எல்லாம் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டனுக்கு வழங்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது போன்ற தவறுகளை எல்லாம் சரி செய்து இருக்க வேண்டும்" என்று அஸ்வின் கூறியுள்ளார். இந்தியா வீசிய 76.2 ஓவர்களில் மொத்தமாகவே எட்டு ஓவர்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் ஓவர் வீசவில்லை. ஜடேஜா வெறும் இரண்டு ஓவர் தான் வீசி இருந்தார்.