ராஞ்சி : இந்திய அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் 2 போட்டிகளில் ரன்கள் சேர்க்கவில்லை என்பதற்காக அவர் சிறந்த வீரர் என்பது மாறிவிடாது என இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் ராஞ்சி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் ஏற்கனவே பும்ரா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதர் 46 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழப்பதையே 4 போட்டிகளிலும் வாடிக்கையாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் முழு ஃபிட்னஸை எட்டவில்லை என்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் பேசுகையில், கேஎல் ராகுல் இப்போது ஃபிட்னஸுடன் இல்லை. அவர் எவ்வளவு சதவிகிதம் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார் என்பதும் முழுமையாக தெரியாது. அவர் விரைவில் களத்திற்கு திரும்புவதற்கான பணியை மருத்துவக் குழு பார்த்து கொள்ளும். இதனால் எங்களின் கவனம் முழுக்க 4வது டெஸ்ட் போட்டியில் தான் உள்ளது.
அதேபோல் 3வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் இளம் வீரர் ரஜத் பட்டிதர் பற்றி ஆலோசனைகள் நடைபெற்றது. அவருக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். இப்படித்தான் கிரிக்கெட் போட்டிகள் இருக்கும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ரஜத் பட்டிதர் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் ஏராளமான ரன்களை விளாசி இருக்கிறார்.
2 டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர் ஒன்றும் மோசமான வீரர் என்று சொல்ல முடியாது. ரஜத் பட்டிதர் நிச்சயம் மிகச்சிறந்த வீரர். அவர் அனைத்து வடிவங்களுக்குமான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை ரஜத் பட்டிதர் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.