ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் அதிரடியாக ரன்கள் குவித்து வருகிறார்.
இந்திய அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் அறிமுக போட்டியிலேயே தனது தடத்தை சிறப்பாக பதித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு மேலான காத்திருப்புக்கு பின், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். அவரின் அறிமுகமே ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நெகிழ்ச்சியாக அமைந்தது.

தொடர்ந்து இந்திய அணிக்காக அறிமுகமான முதல் இன்னிங்ஸிலேயே 48 பந்துகளில் அரைசதம் விளாசிய சர்பராஸ் கான், ஜடேஜாவின் தவறு காரணமாக 62 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன் காரணமாகவே ஓய்வறையில் நின்றிருந்த ரோகித் சர்மா, தனது தொப்பியை கழற்றி வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். ஏனென்றால் சர்பராஸ் கானின் ஆட்டத்தை பார்க்க அவ்வளவு அற்புதமாக இருந்தது.
அதேபோல் விளையாட்டின் ஒரு பகுதி தான் ரன் அவுட் என்று ஜடேஜாவின் செயலுக்கு பாசிட்டிவாக சிந்தித்து கடந்து சென்றார். இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் இருவரையும் அடுத்தடுத்து வீழ்த்தி முழு எனர்ஜியுடன் இருந்தது. அப்போது ஒருமுனையில் ஜெய்ஸ்வால் களத்தில் நிற்க, இன்னொரு பக்கம் சர்பராஸ் கான் களம் புகுந்தார்.
இவர்கள் இருவரும் சில ஓவர்கள் ஸ்பின்னர்களை நிதானமாக எதிர்கொண்ட நிலையில், திடீரென ஜோ ரூட் பந்தில் அபார சிக்ஸ் ஒன்றை ஜெய்ஸ்வால் விளாசி தள்ளினார். இதனை தொடர்ந்து அடுத்த 2வது பந்தை சந்தித்த சர்பராஸ் கான் ஃபுல் லெந்த் பந்தை சிக்சருக்கு அனுப்பி இங்கிலாந்து அணியை திணறடித்தார். உணவு இடைவேளை நெருங்கிய போதும் விக்கெட்டை பற்றி சர்பராஸ் கான் கவலைப்படவில்லை.
சில வீரர்களின் ஆட்டத்தையும், அணுகுமுறையையும் பார்க்கையில் அவர் நீண்ட காலத்திற்கான வீரராக இருப்பார் என்று விமர்சகர்கள் கூறுவார்கள். அப்படியான வார்த்தைகளை தான் ரவி சாஸ்திரி வர்ணனையில் கூறிக் கொண்டே இருந்தார். ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்த பின், தன்னாலும் அதிரடியாக ஆட முடியும் என்று சர்பராஸ் கான் நிரூபிப்பதை பார்க்கவே கொண்டாட்டமாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.