லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் கொஞ்சம் அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக சாடியிருக்கின்றார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இந்திய அணியும் ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த தருணத்தில் இந்த டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்து விரைவாக சேதம் அடைவதால் அதனை மாற்றக் கோரி வீரர்கள் நடுவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்படித்தான் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது பண்ட், கேஎல் ராகுலும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது தண்ணீர் குடிப்பதற்காக இடைவேளை வழங்கப்பட்டது. இந்த இடைவேளை முடிவடைந்த உடன் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது இங்கிலாந்து வீரர்கள் பந்து சேதம் அடைந்திருப்பதாக குற்றச்சாட்டினர். இதை அடுத்து புதிய பந்தை மாற்றும் பணியில் நடுவர்கள் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் நடுவர் பந்தை எடுத்து வந்து கள நடுவர்களுடன் காண்பித்தார்.
அப்போது எந்த பந்து சரியாக இருக்கிறது என்பதை கள நடுவர்கள் சோதித்துப் பார்த்தனர். அதில் 5 பந்துகள் சேதம் அடைந்து இருந்ததை சோதித்த நடுவர்கள், சரியான பந்தை தேர்வு செய்து இங்கிலாந்து வீரர்களிடம் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் வார்ட், இதோ அடுத்த பந்துக்கான மாற்றம் நிகழ்ந்துவிட்டது.
இது என்னால் நம்ப முடியவில்லை. ஏன் நடுவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். பந்தை மாற்ற வேண்டும் என்றால் அதை குடிநீர் இடைவேளையின் போது மாற்றி இருக்கலாமே? எதற்கு இடைவேளை முடிந்த பிறகு ஆட்டத்தை தொடங்காமல் இப்போது பந்தை மாற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள். இது சரியான முறை அல்ல என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, நீங்கள் சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. நடுவர்களுக்கு அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இது அடிப்படை விஷயம். இல்லை அவர்கள் மறந்துவிட்டு இதை போல் செயல்படுகிறார்களா? சரி, பந்தை மாற்றுவதற்காக கூடுதல் பந்துகளை அந்த பெட்டியில் வைத்திருந்தார்கள்.
ஆனால் அதில் ஐந்து பந்துகள் வடிவம் மாறி இருப்பதை களத்தில் தான் நடுவர்கள் சோதித்துப் பார்க்கிறார்கள். அதை முன்பே சோதித்துப் பார்த்து சரியான பந்துகளை ஏன் களத்திற்குள் எடுத்து வரக்கூடாது. இதைக் கூடவா பார்க்க மாட்டார்கள். விக்கெட் விழும்போது இல்லை இடைவேளையின் போது நடுவர்கள் பந்தை சோதித்து பார்த்தால் நேரமும் வீணாவது குறையும். பந்து வீசும் அணியும் பந்தை மாற்றுங்கள் என்று குற்றம் சாட்ட மாட்டார்கள் என்று ரவி சாஸ்திரி கூறினார்.