லண்டன்: இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட்டை இயல்பாக பேட்டிங் செய்ய விடுங்கள் என ரவி சாஸ்திரி நேரலையில் கூறிக் கொண்டு இருந்த போதே, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் அவருக்கு ஆலோசனை அளித்து பேட்டிங் செய்ய அனுப்பினார்கள். ரவி சாஸ்திரி கூறியதைப் போலவே தனது இயல்பில் ஆட முடியாத பண்ட் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். என்ன நடந்தது?
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் கையில் இருந்த நிலையில் இந்திய அணி 135 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது ரிஷப் பண்ட் புதிய பேட்ஸ்மேனாக களத்துக்கு வர இருந்தார். அப்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தற்போதைய கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரிஷப் பண்ட்டுக்கு எதுவும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.

ஐந்தாம் நாள் அன்று இந்திய அணியின் வெற்றிக்கு ரிஷப் பண்ட்டின் ஆட்டம் முக்கியம் என்பதால், அவருக்கு எந்தவித ஆலோசனைகளையும் வழங்கி குழப்ப வேண்டாம் என்று ரவி சாஸ்திரி கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய ரவி சாஸ்திரி, "இன்று அவரை இயல்பாக ஆட விடுங்கள், அவரிடம் பேச வேண்டாம், அதுவே அவரைக் குழப்பிவிடும். அவரது கணினி (மூளை) சரியாக வேலை செய்கிறது. அவர் அனுபவம் வாய்ந்தவர், உலகம் முழுவதும் சதங்கள் அடித்துள்ளார். தனது பொறுப்பு என்னவென்று அவருக்குத் தெரியும். அவர் தனது பாணியில் விளையாட வேண்டும்," என்று தெரிவித்தார்.
ஆனால், சாஸ்திரி இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோதே, கேப்டன் சுப்மன் கில், லார்ட்ஸ் பால்கனியில் ரிஷப் பண்ட்டுடன் பேசிக்கொண்டிருந்தது கேமராவில் பதிவானது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் ரிஷப் பண்ட், இரண்டு சதங்கள் மற்றும் அரைசதங்களை விளாசியிருந்தார். ஆனாலும், ஆலோசனை அளித்து குழப்பினார் சுப்மன் கில்.
இந்த நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து நம்பிக்கையுடன் தொடங்கினார் பண்ட். இருப்பினும், ஆர்ச்சர் வீசிய ஒரு அற்புதமான பந்து, பண்ட்டின் தடுப்பாட்டத்தை உடைத்து ஆஃப்-ஸ்டம்பைப் பதம் பார்த்தது. இதனால், 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார்.
சிறிது நேரத்தில் கே.எல். ராகுலும் வெளியேற, இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. ரிஷப் பண்ட் சிறிது நேரம் களத்தில் நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருக்கக்கூடும், ஆனால் அவரது விக்கெட் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.