தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலமாக இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 312 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்கள். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் இதுவரை 76 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிகமாக விளையாடிய பெருமையை பெற்றவர்கள். அதேபோல் இந்திய அளவில் 13 பேர் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீகாந்த், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் உள்ளிட்டோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்திருந்தாலும், யாரும் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்குவதன் மூலமாக தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 35 முறை 5 விக்கெட்டுகள், 24 முறை 4 விக்கெட்டுகள் உட்பட 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 5 சதங்கள், 14 அரைசதங்கள் உட்பட 3,309 ரன்களை விளாசி இருக்கிறார். 14 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அஸ்வின், தோனியின் கேப்டன்சி கீழ் அறிமுகமானவர்.
வழக்கமாக இந்திய டெஸ்ட் அணிக்கு எந்த கேப்டன் வந்தாலும் உடனடியாக தங்களுக்கான ஸ்பின் இரட்டையர்களை தான் உருவாக்குவார்கள். ஆனால் விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா என்று எந்த கேப்டனாக இருந்தாலும் அஸ்வின் மட்டும் எப்போதும் இந்திய அணியில் இருப்பார். இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பு விராட் கோலிக்கு பின் அஸ்வினுக்கு தான் வந்திருக்க வேண்டும்.
ஆனால் இந்திய கிரிக்கெட் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் பிம்பத்தின் கீழ் கட்டமைக்கப்படும் என்பதால் ரோகித் சர்மா கேப்டனாக்கப்பட்டார். தற்போது அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தரம்சாலா மைதானத்தில் அஸ்வினுக்கு பிசிசிஐ தரப்பில் மரியாதை அளிக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.