சென்னை : 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அஸ்வின் கவுன்சிலிங் சென்றதாக அவரின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இந்திய அணி தரப்பில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் என்ற பெருமையையும், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்டில் விளையாடும் முதல் வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைக்கவுள்ளார்.

இந்த நிலையில் அஸ்வினின் பயணம் குறித்து ரசிகர்கள், விமர்சகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர். இதனிடையே அஸ்வின் மனைவி பிரீத்தி நாராயணன் அஸ்வினின் மோசமான நாட்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில், அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை 2017ஆம் ஆண்டு தான் நடந்தது. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் போது அஸ்வின் என்னிடம் வந்து திடீரென, நான் லெக் ஸ்பின் செய்வதற்கு கற்றுக் கொள்ள போகிறேன். ஒருவேளை எனக்கு அப்படி செய்ய முடியவில்லை என்றால், கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்று கூறினார்.
அதுகுறித்து நான் அதிகமாக சிந்திக்கவில்லை. ஏனென்றால் ஒரு மாததிற்கு முன்பாக தான் ஐசிசி வீரருக்கான விருது மற்றும் ஐசிசி பவுலருக்கான விருதை அஸ்வின் வென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் 2016 மற்றும் 2017 உள்ளூர் போட்டிகளில் அஸ்வினின் எழுச்சி அபாரமாக இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு இடையில், திடீரென ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டார். அந்த நாட்கள் அஸ்வினுக்கு கடினமாக இருந்தது. ஏனென்றால் அஸ்வின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது ரெஸ்ட் வழங்கியுள்ளார்களா என்பதே புரியாமல் இருந்தார்.
எந்த விஷயமாக இருந்தாலும் அஸ்வினுக்கு தெளிவு கிடைக்க வேண்டும். யாராவது அஸ்வினிடம் வந்து, நீங்கள் இன்னும் உழைக்க வேண்டும் என்று கூறினால், உடனடியாக பயிற்சியை தொடங்கிவிடுவார். ஆனால் அஸ்வினுக்கு யாருமே விளக்கமாக கூறவில்லை. அதுதான் அவருக்கு கடினமாக அமைந்தது. அதேபோல் அந்த நேரத்தில் நானும் 2 குழந்தைகளை பெற்றெடுத்து ஓய்வில் இருந்தேன். அதனால் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
அந்த நேரத்தில் தான் அஸ்வின் கவுன்சிலிங் சென்றார். எங்கள் வீட்டில், குடும்பத்தில் உள்ள யாராலும் அஸ்வினுக்கு உதவ முடியவில்லை. இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து அஸ்வினுக்கு உதவி தேவையாக இருந்தது. கிட்டத்தட்ட இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே ஒரு வருடமாகியது. அதன்பின் அஸ்வின் வேறு மனிதரை போல் செயல்பட்டார். அதன்பின் கம்பேக் கொடுப்பதை பற்றி அஸ்வின் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை. ஏனென்றால் அவர் உச்சக்கட்ட திறமையை அனைத்து நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை உருவாக்கி கொண்டதாக கூறியுள்ளார்.