விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் மற்றும் ஒரு மெய்டன் ஓவர் கூட வீச முடியாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 396 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்திய வீரர் பும்ராவின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா. இதன் காரணமாக இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
இந்த போட்டியில் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் மிகச்சிறப்பாக பந்துவீசிய நிலையில், அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 496 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இந்த போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 12 ஓவர்களை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் இன்றி 61 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இதில் கூர்ந்து பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அஸ்வினால் ஒரு மெய்டன் ஓவரை கூட வீழ்த்த முடியாதது தான். இதுவரை இந்திய மண்ணில் 112 இன்னிங்ஸ்களில் பவுலிங் செய்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 5வது முறையாக விக்கெட் வீழ்த்த முடியாமல் இருந்துள்ளார்.
கடைசியாக 2019ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை. அப்போது வெறும் 5 ஓவர்களை மட்டுமே அஸ்வின் வீசியிருந்தார். அதேபோல் மெய்டன் ஓவர்கள் வீச முடியாமல் அஸ்வின் 4வது முறையாக திணறியுள்ளார். இதனால் இந்திய அணியின் மாஸ்டர் ஸ்பின்னரான அஸ்வின் இங்கிலாந்து அணியின் பேஸ் பாலால் அணுகுமுறையால் இந்த போட்டியில் திணறியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.